பக்கம் - 135 -
நபி (ஸல்) அவர்களும் அவ்வப்போது இதுபோன்று நற்செய்திகளை மக்களுக்குக் கூறி வந்தார்கள். ஹஜ்ஜுடைய காலங்களில் உக்காள், மஜன்னா, தில் மஜாஸ் என்ற இடங்களில் தூதுத்துவத்தை எடுத்து கூறுவதற்காக மக்களை சந்திக்கும்போது சொர்க்கத்தின் நற்செய்தி மட்டுமல்லாது இவ்வுலக வாழ்க்கையின் வெற்றியைக் கொண்டும் நற்செய்தி கூறி வந்தார்கள். “மக்களே! “லாஇலாஹஇல்லல்லாஹ்’ (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை) என்று கூறுங்கள் வெற்றி அடைவீர்கள்! அதன் மூலம் அரபியர்களை நீங்கள் ஆட்சி செய்யலாம். அரபியல்லாதவர்களும் உங்களுக்கு பணிந்து நடப்பார்கள். நீங்கள் இறந்துவிட்டாலும் சொர்க்கத்தில் மன்னர்களாகவே இருப்பீர்கள்.” (இப்னு ஸஅது)

உத்பா இப்னு ரபிஆ உலக ஆசாபாசங்களைக் காட்டி நபி (ஸல்) அவர்களிடம் பேரம் பேசி, அவர்களை பணிய வைக்க முயன்றபோது, நபி (ஸல்) அவர்கள் அவனுக்குக் கூறிய பதிலையும், அந்த பதிலில் இருந்து இஸ்லாம் நிச்சயம் மிகைத்தே தீரும் என்று உத்பா விளங்கிக் கொண்டதையும் இதற்கு முன் நாம் கூறியிருக்கிறோம்.

இவ்வாறே அபூதாலிபிடம் வந்த கடைசி குழுவினருக்குக் கூறிய பதிலையும் நாம் முன்பே பார்த்திருக்கின்றோம். அந்த பதிலில் “ஒரே ஒரு வார்த்தையைத்தான் நான் உங்களிடத்தில் எதிர்பார்க்கிறேன். அவ்வார்த்தையினால் அரபியர் உங்களுக்குப் பணிவார்கள்; அரபியர் அல்லாதவர்களையும் நீங்கள் ஆட்சி செய்யலாம்” என்று மிகத் தெளிவாக அம்மக்களுக்கு எடுத்துரைத்தார்கள்.

கப்பாப் இப்னு அரத் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) கஅபாவின் நிழலில் தங்களது போர்வையைத் தலையணையாக வைத்து படுத்திருந்தபோது நான் அவர்களிடம் வந்தேன். அப்போது இணைவைப்பவர்கள் புறத்திலிருந்து பல சிரமங்களை நாங்கள் சந்தித்துக் கொண்டிருந்தோம். நான் நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்விடத்தில் அநியாயக்காரர்களுக்கு எதிராக பிரார்த்திக்க மாட்டீர்களா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்களின் முகம் சிவந்துவிட்டது. படுத்திருந்தவர்கள் எழுந்து அமர்ந்து “உங்களுக்கு முன்னிருந்த மக்களில் ஒருவர் (இஸ்லாமை ஏற்றுக் கொண்டதற்காக) அவன் எலும்பு, சதை, நரம்புகளை ரம்பத்தால் அறுக்கப்பட்டன. ஆனால், அத்தகைய துன்பமும் கூட அவரை மார்க்கத்திலிருந்து திருப்பவில்லை. நிச்சயமாக அல்லாஹ் இம்மார்க்கத்தை முழுமையாக்கியேத் தீருவான். அப்போது (யமன் நாட்டில் உள்ள) ஸன்ஆ நகலிருந்து ஹளரமவுத் நகரம் வரை அல்லாஹ்வின் அச்சத்தைத் தவிர வேறு எந்த வித அச்சமுமின்றி பயணம் செய்பவர் பயணிக்கலாம். ஆனால், நீங்கள் (அல்லாஹ்வின் உதவி) விரைவாக கிடைக்க வேண்டும் என்று அவசரப்படுகிறீர்கள்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)