பக்கம் - 242 -
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) தொடர்ந்து கூறுகிறார்கள்: நான் உமையாவையும் அவனது மகனையும் இழுத்துச் சென்ற போது உமையா என்னுடன் இருப்பதை பிலால் (ரழி) பார்த்து விட்டார். (இந்த உமையாதான் மக்காவில் பிலால் (ரழி) அவர்களுக்கு அதிகம் வேதனை தந்தவன்.) அவனைப் பார்த்த பிலால் (ரழி) “இதோ... இறைநிராகரிப்பாளர்களின் தலைவன் உமையா! இவன் இன்று தப்பித்தால் என்னால் இனி தப்பிக்க முடியாது” என்று சப்தமிட்டார். அதற்கு நான் “பிலாலே சும்மா இரும். இவன் இப்போது எனது கைதி” என்று கூறினேன். மீண்டும் பிலால் (ரழி) “இவன் தப்பித்தால் நான் தப்பிக்க முடியாது” என்று அலறினார். அதற்கு நான் “ஓ கருப்பியின் மகனே! நான் சொல்வது உனக்குக் கேட்கவில்லையா?” என்றேன். அதற்கு மீண்டும் பிலால் (ரழி) “இவன் தப்பித்தால் நான் இனி தப்பிக்கவே முடியாது” என்று கூறிவிட்டு, மிக உயர்ந்த சப்தத்தில் “அல்லாஹ்வின் உதவியாளர்களே! இதோ இறைநிராகரிப்பாளர்களின் தலைவன் உமையா இப்னு கலஃப்! இவன் தப்பித்தால் என்னால் தப்பிக்க முடியாது” என்று கூறினார். முஸ்லிம்கள் இதைக் கேட்டவுடன் வளையத்தைப் போன்று எங்களைச் சூழ்ந்துகொண்டனர். நான் உமையாவைக் காப்பாற்ற முயன்றேன். அப்போது ஒருவர் உமையாவின் மகனை பின்புறத்திலிருந்து வெட்டவே அவன் தரையில் விழுந்தான். இதைப் பார்த்த உமையா உரத்த குரலில் கத்தினான். அதுபோன்ற சப்தத்தை நான் கேட்டதே இல்லை. உடனே நான் “உமையாவே உன்னை நீயே காப்பாற்றிக்கொள்! இன்று என்னால் உன்னைக் காப்பாற்ற முடியாது. உனக்கு எந்தப் பாதுகாப்பும் கொடுக்க முடியாது. உனக்கு எந்தப் பலனையும் என்னால் செய்ய முடியாது” என்றேன். அதற்குப் பின் முஸ்லிம்கள் அவ்விருவரையும் தங்கள் வாட்களால் வெட்டி அவர்கள் கதையை முடித்தனர். இதற்குப் பின் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) “அல்லாஹ் பிலாலின் மீது கருணை காட்டட்டும்! போரில் எனக்குக் கிடைத்த கவச ஆடைகளும் போயின் அவர் எனது கைதிகளையும் கொன்றார்” என்று கூறுவார்கள். (ஸஹீஹுல் புகாரி)

4) இப்போரில் உமர் இப்னு கத்தாப் (ரழி) தனது நெருங்கிய உறவினர் என்றும் பார்க்காமல் தனது தாய்மாமன் ‘ஆஸ் இப்னு ஹிஷாம் இப்னு முகீரா“வைக் கொன்றார்கள். போர் முடிந்து மதீனாவிற்குத் திரும்பிக் கொண்டிருக்கும் வழியில் கைதிகளில் ஒருவராக இருந்த அப்பாஸிடம் “அப்பாஸே! நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனது தந்தை கத்தாப் முஸ்லிமாகுதைவிட நீங்கள் முஸ்லிமாவதுதான் எனக்கு விருப்பமானது. அதற்குக் காரணம் நீங்கள் முஸ்லிமாவது நபி (ஸல்) அவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும்” என்று கூறினார்கள்.

5) அபூபக்ர் (ரழி), இணைவைப்போருடன் வந்திருந்த தமது மகன் அப்துர்ரஹ்மானைக் கூவி அழைத்தார்கள். “ஏ... கெட்டவனே! எனது செல்வங்கள் எங்கே?” என்றார்கள். அதற்கு அப்துர் ரஹ்மான்,

ஆயுதமும் வேகமாக ஓடும் குதிரையும்...
வழிகெட்ட வயோதிகர்களைக் கொல்லும் வாளும்...
இவற்றைத் தவிர வேறொன்றும் என்னிடம் இல்லை என பதிலளித்தார்.