பக்கம் - 292 -
இணைவைப்பவர்கள் நபி (ஸல்) அவர்களைக் கொன்று தீர்த்துவிட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் இருந்தனர். ஆனால், அவர்களை எதிர்த்து ஸஅது இப்னு அபீ வக்காஸ், தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழி) ஆகிய இருவரும் மிக வீரத்துடனும் துணிவுடனும் போரிட்டனர். எனவே, எதிரிகள் தங்களது நோக்கத்தை அடைய முடியவில்லை.. மேலும், இவ்விரு தோழர்களும் அம்பெய்வதில் மிக தேர்ச்சி பெற்றவர்களாக இருந்ததால் நபியவர்களைத் தாக்க வந்த எதிரிகளின் கூட்டத்தை நபியவர்களுக்கு அருகே நெருங்கவிடாமல் தடுத்தனர்.

ஸஅது இப்னு அபீ வக்காஸுக்கு நபி (ஸல்) தங்களின் அம்புக் கூட்டைக் கொடுத்து “ஸஅதே! நீ அம்பெறிவாயாக! எனது தாயும் தந்தையும் உனக்கு அர்ப்பணமாகட்டும்!” என்று கூறினார்கள். நபியவர்கள் ஸஅதை தவிர வேறு எவருக்கும் இவ்வார்த்தையைக் கூறியதில்லை என்பதிலிருந்து எந்த அளவுக்கு நபி (ஸல்) அவர்களை ஸஅது (ரழி) பாதுகாத்தார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். (ஸஹீஹுல் புகாரி)

தல்ஹா இப்னு உபைதுல்லாஹ்வின் வீரத்தைப் பற்றி ஜாபிர் (ரழி) அறிவிப்பதை இமாம் நஸயீ (ரஹ்) பதிவு செய்துள்ளார்கள். அஃதாவது: உஹுத் போரில் எதிரிகள் நபி (ஸல்) அவர்களைச் சூழ்ந்து கொண்டனர். நபியவர்களுடன் சில அன்சாரி தோழர்களும் இருந்தனர். அப்போது நபியவர்கள் “யார் இந்த எதிரிகளை எதிர்த்துப் போரிடுவார்?” என்று கேட்டார்கள். தல்ஹா (ரழி) “நான்” என்று முந்திக் கொண்டு பதில் கூறினார்கள். ஆனால், உடன் இருந்த அன்சாரிகளும் அதற்குத் தயாராகவே நபி (ஸல்) அன்சாரிகளுக்கு அனுமதியளித்தார்கள் ஒவ்வொரு அன்சாரியாக எதிரிகளுடன் சண்டையிட்டு வீர மரணம் எய்தினார்கள். அதற்குப் பின் தல்ஹா (ரழி) எதிரிகளுடன் சண்டையிட்டார்கள். அவர்களது சண்டை 11 நபர்களின் சண்டைக்குச் சமமாக இருந்தது. அவரது கையில் பல வெட்டுகள் விழுந்தன. சில விரல்கள் துண்டிக்கப்பட்டன. அப்போது ‘ஹஸ்“!! (வேதனையில் கூறும் வார்த்தை) என்றார்கள். அதற்கு நபியவர்கள் “நீ ‘பிஸ்மில்லாஹ்’ என்று சொல்லியிருந்தால் மக்கள் பார்க்கும் அளவுக்கு வானவர்கள் உன்னை உயர்த்திருப்பார்கள்” என்றார்கள். இறுதியாக அல்லாஹ் எதிரிகளை விட்டும் நபியவர்களை பாதுகாத்தான். (ஃபத்ஹுல் பாரி)

“39 அல்லது 35 காயங்கள் தல்ஹா (ரழி) அவர்களுக்கு இப்போரில் ஏற்பட்டன. அவர்களது ஆட்காட்டி விரலும் அதை அடுத்துள்ள பெரிய விரலும் வெட்டப்பட்டன.” (ஃபத்ஹுல் பாரி)

கைஸ் இப்னு அபூ ஹாஸிம் கூறியதாக ஸஹீஹுல் புகாரியில் வந்துள்ளது: “உஹுத் போர்க் களத்தில் நபி (ஸல்) அவர்களை நோக்கி சீறி வந்த அம்புகளை எந்தக் கையால் தல்ஹா (ரழி) தடுத்துக் காத்தாரோ அந்தக் கை உஹுத் போருக்குப் பின் செயலிழந்து போனதை நான் பார்த்தேன்.”

நபி (ஸல்) அவர்கள் தல்ஹாவைப் பற்றி இவ்வாறு கூறினார்கள்: “யார் பூமிக்கு மேல் நடமாடும் ஷஹீதை (உயிர் நீத்த தியாகியை) பார்க்க விரும்புகிறார்களோ அவர் தல்ஹா இப்னு உபைதுல்லாஹ்வைப் பார்க்கட்டும்.” (ஸுனனுத் திர்மிதி, இப்னு மாஜா)

ஆயிஷா (ரழி) கூறுகிறார்கள்: உஹுதுப் போரைப் பற்றி அபூபக்ருக்கு முன் பேசப்பட்டால் அன்றைய தினம் முழுவதும் (அதாவது அன்றைய தினத்தில் நபி (ஸல்) அவர்களைப் பாதுகாத்த நன்மையெல்லாம்) தல்ஹாவையே சாரும் என்று கூறுவார்கள். (ஃபத்ஹுல் பாரி)

மேலும், தல்ஹாவைப் பற்றி அபூபக்ர் (ரழி) இவ்வாறு ஒரு கவிதை கூறுவார்கள்:

“தல்ஹா இப்னு உபைதுல்லாஹ்வே!
உனக்காக பல சொர்க்கங்கள் உண்டு.
இன்னும் பல கண்ணழகிகளும் உண்டு.”

இந்த சிரமமான நெருக்கடியான நிலையில், அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்குத் தனது மறைமுகமான உதவியை இறக்கினான்.