பக்கம் - 333 -
நுஃமான் இப்னு பஷீன் சகோதரி சிறிதளவு பேரீத்தம் பழத்தைத் தனது தந்தைக்காகவும் தாய்மாமாவுக்காகவும் எடுத்து வந்தார். அவர் நபி (ஸல்) அவர்களைக் கடந்து சென்றபோது, நபியவர்கள் அவரைத் தன்னருகில் அழைத்து அவரிடம் இருந்த பேரீத்தம் பழத்தை வாங்கி ஒரு துணிக்குமேல் பரத்தினார்கள். பின்பு அகழ் தோண்டிக் கொண்டிருந்தவர்களை அழைத்து சாப்பிடுங்கள் என்றார்கள். அவர்கள் சாப்பிட்டுக் கொண்டேயிருந்தார்கள். பேரீத்தம் பழம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அனைவரும் சாப்பிட்டு சென்று விட்ட பின்பும் அது குறைவின்றி இருந்தது. (இப்னு ஹிஷாம்)

மேற்கூறப்பட்ட இரண்டு சம்பவங்களைவிட ஜாபிர் (ரழி) அறிவிக்கும் மகத்தான ஒரு சம்பவத்தை இமாம் புகாரி (ரஹ்) பதிவு செய்துள்ளார்கள். “நாங்கள் அகழ் தோண்டிக் கொண்டிருந்த போது கடுமையான, இறுக்கமான ஒரு பாறை குறுக்கிட்டது. அப்போது மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “நபியே! ஒரு பாறை அகழில் குறுக்கிட்டுள்ளது” என்றார்கள். நபியவர்கள் “நான் இறங்குகிறேன்” என்று கூறி பாறை இருக்கும் இடத்திற்கு வந்தார்கள். பசியின் காரணமாக அவர்களுடைய வயிற்றில் கல்லைக் கட்டியிருந்தார்கள். நாங்கள் மூன்று நாட்களாக எதுவும் சாப்பிடாமல் இருந்தோம். நபியவர்கள் கடப்பாறையால் வேகமாக அதை அடிக்கவே அது தூள் தூளாகியது. (ஸஹீஹுல் புகாரி)

பரா இப்னு ஆஜிப் (ரழி) கூறுகிறார்கள்: அகழ் தோண்டும்போது ஒரு பகுதியில் எந்த கடப்பாறையாலும் உடைக்க முடியாத ஒரு பாறை குறுக்கிட்டது. அதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் நாங்கள் முறையிட்டோம். நபியவர்கள் கடப்பாறையால் ‘பிஸ்மில்லாஹ்’ என்று கூறி ஓர் அடி அடித்துவிட்டு “அல்லாஹ் மிகப்பெரியவன்! ஷாம் தேசப் பொக்கிஷங்கள் எனக்கு அருளப்பட்டன. நான் இப்போது அங்குள்ள செந்நிறக் கோட்டைகளைப் பார்க்கிறேன்” என்றார்கள். பின்பு இரண்டாவது முறையாக அப்பாறையை அடித்தார்கள். “அல்லாஹ் மிகப் பெரியவன்! பாரசீகத்தின் பொக்கிஷங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டன. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அங்குள்ள மதாயின் நகரத்தின் வெள்ளை மாளிகையை இப்போது பார்க்கின்றேன்” என்றார்கள். பின்பு மூன்றாவது முறையாக ‘பிஸ்மில்லாஹ்’ என்று கூறி அடித்தார்கள். மீதமுண்டான கல்லும் உடைக்கப்பட்டது. அப்போது நபியவர்கள் “அல்லாஹ் மிகப் பெரியவன்! எனக்கு யமன் தேசத்து பொக்கிஷங்கள் கொடுக்கப்பட்டன. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! எனது இந்த இடத்திலிருந்து ஸன்ஆ நகரத்தின் தலைவாயில்களைப் பார்க்கின்றேன்” என்றார்கள். (ஸுனன் நஸாம், முஸ்னது அஹ்மது)

இதுபோன்ற சம்பவம் ஸல்மான் ஃபார்ஸி (ரழி) அவர்கள் மூலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (இப்னு ஹிஷாம்)

மதீனாவைச் சுற்றி மலைகளும், பேரீத்த மரத்தோட்டங்களும், விவசாய அறுவடைகளை உலர வைக்கத் தேவையான களங்களும் சூழ்ந்திருந்தன. ஆனால், மதீனாவின் வடக்குப் பகுதி மட்டும் போக்குவரத்திற்குரிய வழியாக இருந்தது. எனவே, இதுபோன்ற பெரும் படை வருவதற்கு வடக்குப் பகுதி மட்டும் வழியாக அமைய முடியும் என்பதால் அகழை வடக்குப் பகுதியில் தோண்டுமாறு கூறியிருந்தார்கள். (இப்னு ஹிஷாம்)

முஸ்லிம்கள் தொடர்ந்து அகழ் தோண்டுவதில் மும்முரமாக ஈடுபட்டனர். பகலெல்லாம் அகழ் தோண்டி மாலையில் வீடு திரும்புவார்கள். முடிவு செய்யப்பட்ட திட்டத்திற்கேற்ப அகழ் தோண்டும் பணி எதிரிகளின் படை வருவதற்கு முன்பதாகவே முடிவடைந்தது. குறைஷிகள் 4000 நபர்களுடன் ‘ஜுர்ஃப்’ மற்றும் ‘ஜகாபா“விற்கு மத்தியிலுள்ள ‘ரூமா’ என்ற இடத்தில் ஓடைகள் ஒன்று சேரும் பகுதியில் தங்கினர். கத்ஃபான் மற்றும் நஜ்து பகுதியைச் சேர்ந்தவர்கள் மொத்தம் 6000 நபர்கள் உஹுதிற்கு அருகிலுள்ள ‘தனப் நக்மா’ என்ற இடத்தில் தங்கினர்.