பக்கம் - 430 -

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் முஸ்லிம்கள் சந்தித்த மிகப் பயங்கரமான போர் இதுவேயாகும். கிறிஸ்துவ நாடுகளையும் நகரங்களையும் முஸ்லிம்கள் வெற்றி கொள்ள இது ஒரு தொடக்கமாக அமைந்தது. இப்போர் ஹிஜ்ரி 8, ஜுமாதா அல்ஊலா, கி.பி. 629 ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் நடைபெற்றது.

“முஃதா’ என்பது ஷாம் நாட்டின் பல்கா மாநிலத்தின் கீழ் பகுதியிலுள்ள ஓர் ஊர். இங்கிருந்து பைத்துல் முகத்தஸ், இரண்டு நாட்கள் நடக்கும் தொலைதூரத்தில் உள்ளது.

யுத்தத்திற்கான காரணம்

நபி (ஸல்) அவர்கள் புஸ்ராவின் மன்னருக்குக் கடிதம் ஒன்றை எழுதி அல்ஹாரிஸ் இப்னு உமைர் அல்அஸ்தி (ரழி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஆனால், போகும் வழியில் பல்கா மாநிலத்தின் கவர்னராக இருந்த ஷுரஹ்பீல் இப்னு அம்ரு அல்கஸ்ஸானி என்பவன் அவரைக் கைது செய்து கொன்று விட்டான்.

தூதர்களைக் கொலை செய்வது அரசியல் குற்றங்களில் மிகக் கடுமையானதாகும். பகிரங்க மாகப் போருக்கு அழைப்பு விடுப்பதைவிட தூதரைக் கொலை செய்வது மிகக் கொடிய ஒன்றாக கருதப்பட்டது. தனது தூதர் கொல்லப்பட்ட செய்தியை அறிந்தவுடன் நபி (ஸல்) பெரும் கவலைக் குள்ளானார்கள். 3000 வீரர்கள் கொண்ட பெரும் படை ஒன்றைத் தயார் செய்து அவர்களிடம் சண்டையிட அனுப்பி வைத்தார்கள். (ஜாதுல் மஆது, ஃபத்ஹுல் பாரி)

அஹ்ஸாப் போரைத் தவிர வேறு எந்தப் போரிலும் முஸ்லிம் வீரர்களின் எண்ணிக்கை இந்தளவு அதிகம் இருந்ததில்லை.

படைத் தளபதிகள்

நபி (ஸல்) அவர்கள் இப்படைக்கு முதலாவதாக ஜைது இப்னு ஹாரிஸாவை (ரழி) தளபதியாக ஆக்கிவிட்டு “ஜைது கொல்லப்பட்டால் ஜஅஃபர் தளபதியாக இருப்பார் ஜாஃபரும் கொல்லப் பட்டால் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா தளபதியாக இருப்பார்” என்று கூறி வெள்ளை நிறக் கொடியை ஜைது இப்னு ஹாரிஸா (ரழி) கையில் கொடுத்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)

நபியவர்களின் அறிவுரை

பின்பு நபி (ஸல்) அவர்கள் தோழர்களுக்கு வழங்கிய அறிவுரையாவது: நீங்கள் அல்ஹாரிஸ் இப்னு உமைர் கொல்லப்பட்ட இடத்திற்குச் சென்று அங்குள்ளவர்களை இஸ்லாமின் பக்கம் அழையுங்கள். அவர்கள் ஏற்றுக் கொண்டால் நல்லது. ஏற்காவிட்டால் அவர்களுக்கெதிராக அல்லாஹ்விடம் உதவி தேடி அவர்களுடன் போர் செய்யுங்கள். அல்லாஹ்வின் பாதையில் அல்லாஹ்வின் பெயர் கூறி அல்லாஹ்வை நிராகரித்தவர்களுடன் நீங்கள் போர் புரியுங்கள். மோசடி செய்யாதீர்கள், பதுக்காதீர்கள், குழந்தை, பெண், வயது முதிர்ந்தவர், சர்ச்சுகளில் இருக்கும் சன்னியாசிகள் ஆகியோரைக் கொல்லாதீர்கள். பேரீத்த மரங்கள் மட்டுமல்ல, வேறு எந்த மரங்களையும் வெட்டாதீர்கள் கட்டடங்களை இடிக்காதீர்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸுனன் அபூதாவூது, ஸுனனத் திர்மிதி, இப்னு மாஜா)