பக்கம் - 435 -
இரு தரப்பிலும் கொல்லப்பட்டவர்கள்

12 முஸ்லிம்கள் இப்போரில் வீரமரணம் அடைந்தனர். ரோமர்களில் எத்தனை நபர்கள் கொல்லப்பட்டனர் என்ற விவரம் சரிவரத் தெரியவில்லை. இருந்தாலும் போரின் முழு விவரங்களை ஆய்வு செய்து பார்க்கும்போது அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருக்க வேண்டுமெனத் தெரிகிறது.

யுத்தத்தின் தாக்கம்

எந்தப் பழிவாங்கும் நோக்கத்துக்காக முஸ்லிம்கள் இவ்வளவு பெரிய சிரமங்களைச் சகித்தார்களோ! அந்த நோக்கத்தை முஸ்லிம்கள் இப்போரில் அடைந்து கொள்ளவில்லை என்றாலும், இப்போர் முஸ்லிம்களுக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தது. அரபியர்களின் உள்ளங்களில் முஸ்லிம்களைப் பற்றிய பெரும் அச்சத்தை ஏற்படுத்தியதுடன், அவர்களை வியப்பிலும் ஆழ்த்தியது. ரோமர்கள் அக்காலத்தில் பேராற்றல் மிக்கவர்களாக இருந்தனர். அவர்களை எதிர்ப்பது தற்கொலைக்குச் சமமானது என அரபிகள் எண்ணியிருந்தனர். 3000 பேர்கள் கொண்ட ஒரு சிறிய படை இரண்டு லட்சம் வீரர்கள் கொண்ட பெரும் படையுடன் மோதுவதும், பின்பு எந்த பெரிய சேதமும் இன்றி நாட்டுக்குத் திரும்புவதென்பதும் மகா ஆச்சரியமான விஷயமாக இருந்தது.

முஸ்லிம்கள் இதுவரை அரபியர்கள் பார்த்திராத ஓர் அமைப்பில் இருக்கின்றனர் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவர்களுக்கு உதவி வழங்கப்படுகிறது அவர்களது தலைவர் உண்மையில் அல்லாஹ்வின் தூதரே என்பதற்கு இச்சம்பவம் மிகப்பெரிய சான்றாக அமைந்தது. எனவேதான், எப்போதும் முஸ்லிம்களுடன் வம்பு செய்து வந்த பெரும்பாலான அரபு கோத்திரத்தினர், இப்போருக்குப் பின் பணிந்து இஸ்லாமை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தனர். சுலைம், அஷ்ஜஃ, கத்ஃபான், துப்யான், ஃபஜாரா ஆகிய கோத்திரங்களெல்லாம் இஸ்லாமைத் தழுவினர்.

பிற்காலத்தில் ரோமர்களுடன் முஸ்லிம்கள் செய்த போர்களின் தொடக்கமாக இப்போர் இருந்தது. முஸ்லிம்கள் ரோமர்களின் நகரங்களையும் தூரமான நாடுகளையும் வெற்றி கொள்வதற்கு முன்மாதிரியாக இப்போர் அமைந்தது.

தாதுஸ்ஸலாசில் படைப் பிரிவு

ஷாம் நாட்டின் மேற்புறங்களில் வசிக்கும் அரபியர்களின் நிலைப்பாட்டை நபி (ஸல்) அவர்கள் இப்போர் வாயிலாக நன்கு விளங்கிக் கொண்டார்கள். ஏனெனில், இவர்களெல்லாம் ரோமர்களுடன் சேர்ந்து கொண்டு இப்போரில் முஸ்லிம்களைத் தாக்கினர். எனவே, ரோமர்களை விட்டு இவர்களைப் பிரித்து முஸ்லிம்களோடு இணக்கமாக்க வேண்டும். அப்போதுதான் மற்றொரு முறை நம்மை எதிர்ப்பதற்கு இது போன்ற பெருங்கூட்டம் ஒன்று திரளாது என்று நபி (ஸல்) முடிவு செய்தார்கள்.

இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நபி (ஸல்) அம்ரு இப்னு ஆஸைத் தேர்வு செய்தார்கள். ஏனெனில், இவரது தந்தையின் தாய் அப்பகுதியில் வசிக்கும் ‘பலிய்’ கிளையினரைச் சேர்ந்தவராவார். எனவே, அவர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ள இவரைத் தேர்ந்தெடுத்து முஃதா போர் முடிந்தவுடனேயே ஹிஜ்ரி 8, ஜுமாதல் ஆகிராவில் நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். இப்படை அனுப்பப்பட்டதற்கு மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது: ‘குழாஆ’ கிளையினர் முஸ்லிம்களின் மீது தாக்குதல் நடத்த ஒன்று திரள்கின்றனர் என்ற செய்தி ஒற்றர்கள் மூலம் நபியவர்களுக்குத் தெரிய வர, அவர்களை எதிர்ப்பதற்காக இப்படையை நபி (ஸல்) அனுப்பினார்கள். ஒரு வேலை இரண்டு காரணங்களை முன்னிட்டும் நபியவர்கள் இப்படையை அனுப்பி இருக்கலாம்.