பக்கம் - 436 -
அம்ரு இப்னு ஆஸ் (ரழி) அவர்களுக்கு நபி (ஸல்) வெள்ளை நிறத்தில் ஒரு பெரிய கொடியையும், கருப்பு நிறத்தில் ஒரு சிறிய கொடியையும் வழங்கி 300 முக்கிய வீரர்களுடன் அனுப்பினார்கள். இரவில் பயணிப்பதும் பகலில் பதுங்குவதுமாக அப்படையினர் சென்றனர். எதிரி கூட்டத்தினர் தங்கியிருக்கும் இடத்தை நெருங்கிய போது, அங்கு மிக அதிகமான எண்ணிக்கையில் எதிரிகள் இருக்கிறார்கள் என்ற செய்தி அம்ருக்கு தெரிய வந்தது. உடனே அவர் ராஃபி இப்னு மக்கீஸ் என்பவரை நபியவர்களிடம் உதவி கேட்டு அனுப்பி வைத்தார். நபி (ஸல்) அபூ உபைதாவுக்கு ஒரு கொடியைக் கொடுத்து 200 தோழர்களுடன் அனுப்பினார்கள். இத்தோழர்களில் அபூபக்ர், உமர் (ரழி) மற்றும் முஹாஜிர், அன்சாரிகளில் கீர்த்திமிக்க தோழர்கள் இடம் பெற்றிருந்தனர். அம்ர் (ரழி) அவர்களுடன் அபூ உபைதா (ரழி) வந்து சேர்ந்து கொண்டார்கள். தொழுகை நேரம் வந்த போது அபூ உபைதா (ரழி) மக்களுக்குத் தொழ வைக்க நாடினார். “நான்தான் அமீர் (படைத் தலைவன். நானே தொழவைப்பேன்) நீர் எங்களுக்கு உதவிக்காகத்தான் வந்திருக்கின்றீர்” என்று அம்ரு (ரழி) கூற, இதை அபூ உபைதா (ரழி) ஏற்றுக் கொண்டார்கள். அதற்குப் பின் அம்ருதான் மக்களுக்குத் தொழுகை நடத்தி வந்தார்கள். அம்ரு (ரழி) படையை அழைத்துக் கொண்டு ‘குழாஆ’ கோத்திரத்தினர் வசிக்கும் பகுதி அனைத்தையும் சுற்றினார்கள்.

இறுதியில், முஸ்லிம்களை எதிர்க்கத் தயாராக இருந்த எதிரிகளின் ஒரு கூட்டத்தினரைக் கண்ட போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தி நாலாபுறமும் அவர்களைச் சிதறடித்தனர்.

எடுத்துக் கொண்ட பணியை வெற்றிகரமாக முடித்து திரும்பிக் கொண்டிருக்கிறோம் என்ற மகிழ்ச்சியான செய்தியையும் மற்றும் போர்க்கள தகவல்களையும் நபி (ஸல்) அவர்களிடம் கூறும்படி அவ்ஃப் இப்னு மாலிக் அஷ்ஜம்யை அம்ரு இப்னு ஆஸ் (ரழி) அனுப்பினார்கள்.

‘தாத்துஸ் ஸலாசில்’ என்பது ‘வாதில் குரா’ என்ற பகுதிக்குப் பின்னுள்ள இடமாகும். அதற்கும் மதீனாவுக்கும் மத்தியில் பத்து நாட்கள் நடை தூரம் உள்ளது.

இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுவதாவது: ஜுதாம் கோத்திரத்தினர் வசிக்கும் இடத்திலுள்ள ஒரு கிணற்றருகில் முஸ்லிம்கள் தங்கினர். அக்கிணற்றின் பெயர் ‘ஸல்சல்’ என்பதால் இப்படைக்கு பெயர் ‘தாத்துஸ் ஸலாசில்’ என வந்தது. (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

அபூகதாதா படைப் பிரிவு

கத்ஃபான் கிளையினர் ‘கழீரா’ என்ற இடத்தில் ஒன்றுகூடி மதீனாவின் மீது தாக்குதல் நடத்துவதற்காக திட்டமிடுகின்றனர் என்ற தகவல் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. ‘கழீரா’ என்பது நஜ்து மாநிலத்தில் ‘முஹாப்’ கோத்திரத்தினர் வசிக்கும் இடம். எனவே, நபி (ஸல்) அவர்கள் 15 வீரர்களுடன் அபூ கதாதாவை அனுப்பி வைத்தார்கள். அங்கு சென்ற அபூகதாதா (ரழி) பல எதிரிகளைக் கொன்று விட்டு சிலரைச் சிறைபிடித்து, கனீமா பொருட்களுடன் மதீனா திரும்பினார்கள். மொத்தம் 15 நாட்கள் இவர்கள் மதீனாவை விட்டு வெளியே இருந்தனர். (தல்கீஹ்)