பக்கம் - 541 -
அலீ (ரழி) கூறுகிறார்கள்: ஒருமுறை நபியவர்களை பார்த்த அபூஜஹ்ல் “நாங்கள் உங்களை பொய்ப்பிக்கவில்லை. நீங்கள் சொல்கின்ற மார்க்கத்தைத் தான் பொய்ப்பிக்கிறோம்” என்றான். இது விஷயமாக அல்லாஹ் கூறுகிறான்:

(நபியே! உங்களைப் பொய்யரென) அவர்கள் கூறுவது, நிச்சயமாக உங்களுக்குக் கவலையைத் தருகின்றது என்பதை உறுதியாக நாம் அறிவோம். நிச்சயமாக அவர்கள் உங்களைப் பொய்யாக்கவில்லை. ஆனால், இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களையே (பொய்யாக்கி) நிராகரிக்கின்றனர். (அல்குர்ஆன் 6:33) (மிஷ்காத், ஸுனனுத் திர்மிதி)

அன்றொரு நாள் மன்னன் ஹிர்கல் (ஹெர்குலிஸ்) அவையிலே அபூ ஸுஃப்யான் எதிரியாக இருந்தும் நபியவர்களைப் பற்றிக் கூறிய உரையாடல் நினைவுகூரத் தக்கது. “அவர் (நபி) இஸ்லாமைப் பற்றிக் கூறுவதற்கு முன்பு, பொய் பேசியுள்ளார் என்று அவர் மீது நீங்கள் பழி சுமத்தி இருக்கிறீர்களா?” என்று மன்னன் கேட்க, அதற்கு அபூ ஸுஃப்யான், “அவ்வாறு அவர் ஒருபோதும் பொய் பேசியதில்லை” என்று கூறினார்.

நபி (ஸல்) மற்றவர்களை விட அதிகம் பணிவுடையவர்களாகவும், பெருமை கொள்வதை விட்டு விலகியவர்களாகவும் இருந்தார்கள். மக்கள் அரசர் முன்பு எழுந்து நிற்பது போன்று தன் முன் எழுந்து நிற்பதைத் தடை செய்தார்கள். நலிந்தோர்களையும், நோயாளிகளையும் நலம் விசாரிப்பார்கள். ஏழைகளுடன் சேர்ந்திருப்பார்கள். அடிமை விருந்துக்கு அழைத்தாலும் இன் முகத்துடன் ஏற்றுக் கொள்வார்கள். தங்களுடைய தோழர்களுடன் அவர்களில் ஒருவராக அமர்ந்திருப்பார்கள்.

ஆயிஷா (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) தங்களது காலணிகளையும், தங்களது ஆடைகளையும் தாங்களே தைத்துக் கொள்வார்கள். உங்களில் ஒருவர் வீட்டில் வேலை செய்வது போன்றே நபியவர்களும் தங்களுடைய வீட்டில் வேலை செய்வார்கள். மனிதர்களில் ஒருவராகவே இருந்தார்கள். தங்களது ஆடைகளைத் தானே சுத்தம் செய்வார்கள். தனது ஆட்டில் தானே பாலைக் கறப்பார்கள். தங்களது வேலைகளைத் தானே செய்து கொள்வார்கள். (மிஷ்காத்)

மற்றெவரையும் விட அதிகம் நபி (ஸல்) வாக்குகளை நிறைவேற்றுபவர்களாக இருந்தார்கள். உறவினர்களுடன் சேர்ந்து நெருக்கமாக வாழ்ந்தார்கள். மக்கள் மீது மிக்க அன்பும் பாசமும் கருணையும் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்களுடன் மிக அழகிய முறையில் ஒழுக்கத்துடன் நடந்து கொண்டார்கள். மக்களில் மிக உன்னதமான குணம் பெற்றிருந்தார்கள். அவர்களிடம் எந்தக் கெட்ட குணமும் இருந்ததில்லை. அருவருப்பான சொல், செயல் ஏதும் அவர்களிடம் இருந்ததில்லை. சபிக்கும் வழக்கமோ, கடைத் தெருக்களில் கூச்சல் போடும் பேதைமையோ கிடையாது. கெட்டதைக் கெட்டதை கொண்டு நிவர்த்தி செய்ய மாட்டார்கள். மாறாக, அதனை மன்னித்து மறந்து விடுவார்கள். எவரையும் தனக்குப் பின்னால் நடக்க அனுமதிக்க மாட்டார்கள். உடையிலோ ஆடையிலோ தங்களுடைய அடிமைகளைக் காட்டிலும் தம்மை உயர்வாக காட்டிக் கொள்ள மாட்டார்கள். தங்களுக்கு பணிவிடை செய்தவர்களுக்குப் பணிவிடை செய்வார்கள். தங்களதுப் பணியாளரை ‘சீ’ என்று கூட கூறியதில்லை. ஒரு செயலை செய்ததற்காகவோ, செய்யாமல் போனதற்காகவோ யாரையும் கண்டித்ததில்லை.

நபி (ஸல்) தோழர்களை அதிகம் நேசித்து, அவர்களுடன் அதிகம் பழகுவார்கள். அவர்களுடைய ஜனாஸாக்களிலும் கலந்து கொள்வார்கள். ஏழையை அவரது இல்லாமையினால் இளக்காரமாகப் பார்க்க மாட்டார்கள்.