பல்கீஸ் ராணி
பாலஸ்தீனத்தில் வாழ்ந்த தாவுத் அலைஹி வஸ்ஸலாம் அவர்களின் மகன் ஸுலைமான் அலைஹி வஸ்ஸலாம்
அவர்கள் ஆவார்கள். தந்தைக்குப் பிறகு அரசனாக ஆட்சி பொறுப்பேற்றார். அவருக்கு அல்லாஹ்
பல அற்புத ஆற்றல்களை வழங்கி இருந்தான். பறவைகளுடன் பேசும் திறமை அவற்றில் ஒன்று. ஏமன்
நாட்டை சேர்ந்த மஆரிப் என்ற ஊருக்கு அருகில் சபவு கோத்திரத்தார் வாழ்ந்து வந்தார்கள்.
அவர்களது ராணியான துப்பவு பரம்பரையில் வந்த பல்கீஸ் ராணியின் தலைமையில் சூரியனை வணங்கி
வந்தனர். இதை நேரடியாக பார்த்த ஒரு மரங்கொத்தி பறவை ஸுலைமான் அலைஹி வஸ்ஸலாம் அவர்களிடம்
வந்து சொன்னது.
![]() சூரிய கோயிலின் சிதைந்த பகுதி |
![]() அரண்மனையின் சிதைந்து போன அஸ்திவாரத்தின் பகுதி |
![]() |
அவர் பறவைகளை(ப் பற்றியும்) பரிசீலனை செய்து: “நான்
(இங்கே) ஹுது ஹுது(ப் பறவையைக்) காணவில்லையே என்ன காரணம்? அல்லது அது மறைந்தவற்றில்
நின்றும் ஆகி விட்டதோ?” என்று கூறினார்.
“நான் நிச்சயமாக அதைக் கடுமையான வேதனையைக் கொண்டு வேதனை செய்வேன்; அல்லது அதனை நிச்சயமாக
அறுத்து விடுவேன்; அல்லது (வராததற்கு) அது என்னிடம் தெளிவான ஆதாரத்தைக் கொண்டு வர வேண்டும்”
என்றும் கூறினார்.
(இவ்வாறு கூறி) சிறிது நேரம் தாமதித்தார்; அதற்குள் (ஹுது ஹுது வந்து) கூறிற்று: “தாங்கள்
அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்து கொண்டேன். “ஸபா”விலிருந்து உம்மிடம் உறுதியான செய்தியைக்
கொண்டு வந்திருக்கிறேன்.”
“நிச்சயமாக அ(த் தேசத்த)வர்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன்; இன்னும், அவளுக்கு
(தேவையான) ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது; மகத்தான ஓர் அரியாசனமும் அவளுக்கு
இருக்கிறது.
“அவளும், அவளுடைய சமூகத்தார்களும் அல்லாஹ்வையன்றி, சூரியனுக்கு ஸுஜூது செய்வதை நான்
கண்டேன்; அவர்களுடைய (இத்தவறான) செயல்களை அவர்களுக்கு ஷைத்தான் அழகாகக் காண்பித்து,
அவர்களை நேரான வழியிலிருந்து தடுத்துள்ளான்; ஆகவே அவர்கள் நேர்வழி பெறவில்லை.
“வானங்களிலும், பூமியிலும், மறைந்திருப்பவற்றை வெளியாக்குகிறவனும்; இன்னும் நீங்கள்
மறைப்பதையும், நீங்கள் வெளியாக்குவதையும் அறிபவனுமாகிய அல்லாஹ்வுக்கு அவர்கள் ஸுஜூது
செய்து வணங்க வேண்டாமா?
“அல்லாஹ் - அவனையன்றி வணக்கத்திற்குரிய நாயன் (வேறு) இல்லை. (அவன்) மகத்தான அர்ஷுக்கு
உரிய இறைவன்” (என்று ஹுது ஹுது கூறிற்று).
(அதற்கு ஸுலைமான்:) “நீ உண்மை கூறுகிறாயா அல்லது பொய்யர்களில் நீ இருக்கிறாயா என்பதை
நாம் விரைவிலேயே கண்டு கொள்வோம்” என்று கூறினார்.
“என்னுடைய இந்தக் கடிதத்தைக் கொண்டு செல்; அவர்களிடம் இதைப் போட்டு விடு; பின்னர் அவர்களை
விட்டுப் பின் வாங்கி; அவர்கள் என்ன முடிவு செய்கிறார்கள் என்பதைக் கவனி” (என்று கூறினார்).
(அவ்வாறே ஹுது ஹுது செய்ததும் அரசி) சொன்னாள்: “பிரமுகர்களே! (மிக்க) கண்ணியமுள்ள ஒரு
கடிதம் என்னிடம் போடப்பட்டுள்ளது.”
நிச்சயமாக இது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது; இன்னும் நிச்சயமாக இது: “பிஸ்மில்லாஹிர்
ரஹ்மானிர் ரஹீம்” என்று (துவங்கி) இருக்கிறது.
“நீங்கள் என்னிடம் பெருமையடிக்காதீர்கள். (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டவர்களாக
என்னிடம் வாருங்கள்” (என்றும் எழுதப்பட்டிருக்கிறது).
எனவே பிரமுகர்களே! “என்னுடைய (இந்த) விஷயத்தில் ஆலோசனை கூறுவீர்களாக! நீங்கள் என்னிடம்
நேரிடையாகக் கருத்துச் சொல்லாதவரை நான் எந்த காரியத்தையும் முடிவு செய்பவளல்ல” என்று
கூறினாள்.
“நாங்கள் பெரும் பலசாலிகளாகவும், கடினமாக போர் செய்யக்கூடியவர்களாகவும் இருக்கிறோம்;
(ஆயினும்) முடிவு உங்களைப் பொறுத்தது, என்ன முடிவு எடுக்கிறீர்கள் என்பதை சிந்தித்துக்
கொள்ளுங்கள்” என்று அவர்கள் சொன்னார்கள்.
அவள் கூறினாள்: “அரசர்கள் ஒரு நகரத்துள் (படையெடுத்து) நுழைவார்களானால், நிச்சயமாக
அதனை அழித்து விடுகிறார்கள்; அதிலுள்ள கண்ணியமுள்ளவர்களை, சிறுமைப் படுத்தி விடுகிறார்கள்;
அவ்வாறு தான் இவர்களும் செய்வார்கள்.
“ஆகவே, நிச்சயமாக நான் அவர்களுக்கு ஓர் அன்பளிப்பை அனுப்பி, (அதைக் கொண்டு செல்லும்)
தூதர்கள் என்ன கொண்டு வருகிறார்கள் என்பதைப் பார்க்கப் போகிறேன்.”
அவ்வாறே (தூதர்கள்) ஸுலைமானிடம் வந்தபோது; அவர் சொன்னார்: “நீங்கள் எனக்குப் பொருளைக்
கொண்டு உதவி செய்(ய நினைக்)கிறீர்களா? அல்லாஹ் எனக்குக் கொடுத்திருப்பது, உங்களுக்கு
அவன் கொடுத்திருப்பதை விட மேலானதாகும்; எனினும், உங்கள் அன்பளிப்பைக் கொண்டு நீங்கள்
தான் மகிழ்ச்சி அடைகிறீர்கள்!
“அவர்களிடமே திரும்பிச் செல்க; நிச்சயமாக நாம் அவர்களால் எதிர்க்க முடியாத (பலமுள்ள)
ஒரு பெரும் படையைக் கொண்டு அவர்களிடம் வருவோம்; நாம் அவர்களைச் சிறுமைப் படுத்தி, அவ்வூரிலிருந்து
வெளியேற்றிவிடுவோம், மேலும் அவர்கள் இழிந்தவர்களாவார்கள்” (என்று ஸுலைமான் கூறினார்).
“பிரமுகர்களே! அவர்கள் என்னிடம் வழிபட்டவர்களாக வருமுன், உங்களில் யார் அவளுடைய அரியாசனத்தை
என்னிடம் கொண்டுவருபவர்?” என்று (ஸுலைமான் அவர்களிடம்) கேட்டார்.
ஜின்களில் (பலம் பொருந்திய ஓர்) இஃப்ரீத் கூறிற்று; “நீங்கள் உங்கள் இடத்திலிருந்து
எழுந்திருப்பதற்கு முன் அதை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுவேன்; நிச்சயமாக நான்
அதற்கு சக்தியுள்ளவனாகவும், நம்பிக்கைக்கு உரியவனாகவும் இருக்கிறேன்.”
இறைவேதத்தின் ஞானத்தைப் பெற்றிருந்த ஒருவர்: “உங்களுடைய கண்ணை மூடித்திறப்பதற்குள்,
அதை உங்களிடம் கொண்டு வந்து விடுகிறேன்” என்று கூறினார்; (அவர் சொன்னவாறே) அது தம்மிடம்
வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும்: “இது என்னுடைய இறைவனின் அருட் கொடையாகும் நான் நன்றியறிதலுடன்
இருக்கின்றேனா, அல்லது மாறு செய்கிறேனா என்று (இறைவன்) என்னைச் சோதிப்பதற்காகவும்;
எவன் ஒருவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகின்றானோ அவன் நன்றி செலுத்துவது அவனுக்கே
(நன்மை)யாவும்; மேலும், எவன் (நன்றி மறந்து) மாறு செய்கிறானோ (அது அவனுக்கே இழப்பாகும்;
ஏனெனில்) என் இறைவன், (எவரிடத்தும்) தேவைப் படாதவனாகவும், மிகவும் கண்ணியம் மிக்கவனாகவும்
இருக்கின்றான்” என்று (ஸுலைமான்) கூறினார்.
(இன்னும் அவர்) கூறினார்: “(அவள் கண்டு அறிந்து கொள்ள முடியாதபடி) அவளுடைய அரியாசன(த்தின்
கோல)த்தை மாற்றி விடுங்கள்; அவள் அதை அறிந்து கொள்கிறாளா, அல்லது அறிந்து கொள்ள முடியாதவர்களில்
ஒருத்தியாக இருக்கிறாளா என்பதை நாம் கவனிப்போம்.”
ஆகவே, அவள் வந்த பொழுது, “உன்னுடைய அரியாசனம் இது போன்றதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு
அவள்: “நிச்சயமாக இது அதைப் போலவே இருக்கிறது” என்று கூறினாள்; இந்தப் பெண்மணிக்கு
முன்பே நாங்கள் ஞானம் கொடுக்கப்பட்டு விட்டோம், நாங்கள் முஸ்லிம்களாகவும் இருக்கிறோம்
(என்று ஸுலைமான் கூறினார்).
அல்லாஹ்வையன்றி (மற்றவர்களை) அவள் வணங்கிக் கொண்டிருந்ததுதான் அவளைத் தடுத்துக் கொண்டிருந்தது
நிச்சயமாக அவள் காஃபிர்களின் சமூகத்திலுள்ளவளாக இருந்தாள்.
அவளிடம்: “இந்த மாளிகையில் பிரவேசிப்பீராக!” என்று சொல்லப்பட்டது; அப்போது அவள் (அம்
மாளிகையின் தரையைப் பார்த்து) அதைத் தண்ணீர்த் தடாகம் என்று எண்ணிவிட்டாள்; எனவே (தன்
ஆடை நனைந்து போகாமலிருக்க அதைத்) தன் இரு கெண்டைக் கால்களுக்கும் மேல் உயர்த்தினாள்;
(இதைக் கண்ணுற்ற ஸுலைமான்), “அது நிச்சயமாகப் பளிங்குகளால் பளபளப்பாகக் கட்டப்பட்ட
மாளிகைதான்!” என்று கூறினார். (அதற்கு அவள்) “இறைவனே! நிச்சயமாக, எனக்கு நானே அநியாயம்
செய்து கொண்டேன்; அகிலங்களுக்கெல்லாம் இறைவனான அல்லாஹ்வுக்கு, ஸுலைமானுடன் நானும் முற்றிலும்
வழிபட்டு) முஸ்லிமாகிறேன்” எனக் கூறினாள். அல்குர்ஆன் 27:20-44