பக்கம் - 121 -
குறைஷிகளின் கடைசிக் குழு

தாங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த கணவாயிலிருந்து வெளியேறிய நபி (ஸல்) முன்னர் போலவே அழைப்புப் பணியைச் செய்து கொண்டிருந்தார்கள். குறைஷிகள் உறவுகளைத் துண்டிப்பதை விட்டுவிட்டாலும், முஸ்லிம்களுக்குத் தொந்தரவு தருவது, அல்லாஹ்வின் வழியை விட்டு மக்களைத் தடுப்பது என்ற தங்களது பழைய பாட்டையிலேயே நடந்து கொண்டிருந்தனர். அபூதாலிப் எண்பது வயதை கடந்தும் தன்னால் முடிந்த அளவு நபி (ஸல்) அவர்களை பாதுகாத்து வந்தார். கடினமான சோதனைகளால் குறிப்பாக, ஒதுக்கி வைக்கப்பட்ட காலத்தில் ஏற்பட்ட இன்னல்களால் மிகவும் வலுவிழந்து தளர்ந்திருந்தார். கணவாயிலிருந்து வெளியேறிய சில மாதங்களிலேயே கடினமான நோய்வாய்பட்டார்.

இதைக் கண்ட இணைவைப்பவர்கள், அபூதாலிபின் மரணத்திற்குப் பிறகு அவரது சகோதரன் மகனான முஹம்மது (ஸல்) அவர்களுக்கு ஊறு விளைவிப்பது தங்களுக்கு அரபிகளின் மத்தியில் கெட்ட பெயரை ஏற்படுத்திவிடும் என்று பயந்து தங்களுக்கு விருப்ப மில்லையெனினும் நபி (ஸல்) அவர்களின் வார்த்தைகளில் சிலவற்றை ஒப்புக்கொண்டு அபூதாலிபின் முன்னிலையில் நபி (ஸல்) அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்பதற்காக ஒரு குழுவை தயார் செய்தனர். அபூதாலிபிடம் வந்த இறுதி குழு இதுதான்.

இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்கள்: அபூதாலிப் நோய்வாய்ப்பட்ட போது குறைஷிகள் தங்களுக்குள் இவ்வாறு பேசிக் கொண்டனர்: “ஹம்ஜா, உமர் இஸ்லாமைத் தழுவிவிட்டனர். முஹம்மதைப் பற்றி அனைத்து குறைஷி குலத்தவருக்கும் தெரிந்துவிட்டது. நாம் அபூதாலிபிடம் செல்வோம்; தனது தம்பி மகனை அவர் கட்டுப்படுத்தட்டும்; நம்மிடமும் அவருக்காக ஏதாவது ஒப்பந்தத்தை வாங்கிக் கொள்ளட்டும். இல்லையெனில், மக்கள் நமது கட்டுப்பாட்டுக்குக் கீழ் இல்லாமல் மீறி விடுவார்கள் என நாம் அஞ்சவேண்டியுள்ளது”

மற்றொரு அறிவிப்பில் வருவதாவது: இந்தக் கிழவர் இறந்த பின் அவருக்கு (முஹம்மதுக்கு) ஏதாவது ஆகிவிட்டால் அரபுகள் “முஹம்மதுடைய பெரியதந்தை இறந்தப் பின் முஹம்மதுக்குக் கெடுதிகள் செய்கின்றனர். அவர் உயிருடன் இருக்கும்போது இவரை விட்டுவிட்டார்கள்” என்று குறை கூறுவார்களோ என நாம் அஞ்சவேண்டியுள்ளது என தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

உத்பா, ஷைபா, அபூஜஹ்ல், உமைய்யா, அபூசுஃப்யான் இப்னு ஹர்ஃப் போன்ற குறைஷித் தலைவர்களில் சிலர் தங்களது கூட்டங்களில் உள்ள இருபத்தைந்து நபர்களைச் சேர்த்துக்கொண்டு அபூதாலிபிடம் பேசுவதற்காக வந்தனர். அவர்கள் “அபூதாலிபே! நீங்கள் எங்களிடம் மதிப்புமிக்கவர்; உங்களுக்கு ஏற்பட்டுள்ள (நோயின்) நிலை உங்களுக்கு நன்றாகவே தெரியும். உங்களுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என நாங்கள் பயப்படுகிறோம். மேலும், எங்களுக்கும், உங்களது சகோதரன் மகனுக்கும் மத்தியிலுள்ள நிலை உங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆதலால், அவரை இப்போது அழைத்து அவரிடமிருந்து எங்களுக்குச் சில வாக்குறுதிகளை வாங்கிக் கொடுங்கள். எங்களிடமிருந்தும் அவருக்குச் சில வாக்குறுதிகளை வாங்கிக் கொடுங்கள். எங்களை எங்களது மார்க்கத்தில் விட்டு விடட்டும். அவரை அவரது மார்க்கத்தில் விட்டு விடுகிறோம். எங்களது மார்க்கத்தை அவர் குறை கூறாமல் இருக்கட்டும்” எனக் கூறினார்கள்.