பக்கம் - 139 -
இதைப் பார்த்துக் கொண்டிருந்த ரபிஆவின் மகன்களில் ஒருவர் மற்றவரிடம் “இதோ உனது அடிமையை அவர் குழப்பிவிட்டார்” என்று கூறினான். அத்தாஸ் திரும்பி வந்தவுடன் “உனக்கு என்ன கேடு நேர்ந்தது?” என்று அவ்விருவரும் இடித்துரைத்தனர். அதற்கு அத்தாஸ், “எனது எஜமானர்களே! இவரை விடச் சிறந்த எவரும் இப்பூமியில் இல்லை. இவர் எனக்கு ஒரு விஷயத்தை மிக உறுதியாகக் கூறினார். அதனை இறைத்தூதரைத் தவிர வேறெவரும் அறிந்திருக்க முடியாது” என்றார். அதற்கு அவ்விருவரும் “அத்தாஸே! உனக்கென்ன கேடு. இவர் உம்மை உமது மார்க்கத்திலிருந்து திருப்பிவிடாமல் இருக்கட்டும். உமது மார்க்கம்தான் இவன் மார்க்கத்தைவிட சிறந்தது” என்று கூறினர். (இப்னு ஹிஷாம்)

நபி (ஸல்) அவர்கள் அந்தத் தோட்டத்திலிருந்து வெளியேறி மிகவும் கவலையுடன் உள்ளம் உடைந்தவர்களாக மக்கா நோக்கி திரும்பும் வழியில் ‘கர்னுல் மனாஜில்’ என்ற இடத்தை அடைந்த போது அல்லாஹ் அவர்களிடம் ஜிப்ரீலையும், (மலைகளின் வானவர்) மலக்குல் ஜிபாலையும் அனுப்பினான். மலக்குல் ஜிபால் தாயிஃப்வாசிகளாகிய இம்மக்களை இரு மலைகளையும் ஒன்று சேர்த்து நசுக்கி அழித்துவிடவா”? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்.

ஆயிஷா (ரழி) இச்சம்பவத்தின் விவரத்தைக் கூறுகின்றார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் “உஹுத் போரைவிடக் கடுமையான நாள் எதுவும் உங்களது வாழ்க்கையில் வந்துள்ளதா?” என்று கேட்டேன். அதற்கு “உனது கூட்டத்தாரின் மூலம் நான் பல துன்பங்களைச் சந்தித்துள்ளேன். அவற்றில் நான் சந்தித்த துன்பங்களில் மிகக் கடுமையானது ‘யவ்முல் அகபா’ என்ற தினத்தில் எனக்கு ஏற்பட்ட வேதனையே ஆகும். நான் அப்து யாலிலின் மகனிடம் என்னை அறிமுகப்படுத்தினேன். ஆனால், அவன் எனது அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. நான் கவலையுடன் திரும்ப மக்காவை நோக்கி பயணமாகி ‘கர்னுல் மனாஜில்’ என்ற பெயருள்ள ‘கர்னு ஸஆலிப்’ என்ற இடத்தில் வந்து தங்கிய போதுதான் எனக்கு முழுமையான நினைவே திரும்பியது. நான் தலையைத் தூக்கிப் பார்த்தபோது என் தலைக்கு மேல் ஒரு மேகம் நிழலிட்டுக் கொண்டிருந்தது. அந்த மேகத்தில் ஜிப்ரீல் இருந்தார். அவர் என்னை அழைத்து ‘நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் உங்களது கூட்டத்தாரிடம் பேசியதையும் அவர்கள் உங்களுக்குக் கூறிய பதிலையும் கேட்டுக் கொண்டான். இம்மக்கள் விஷயத்தில் நீங்கள் விரும்பியதை மலக்குல் ஜிபாலுக்கு ஏவ வேண்டும் என்பதற்காக அவரை உங்களிடம் அனுப்பி இருக்கின்றான்’ என்று கூறினார். மலக்குல் ஜிபால் என்னை அழைத்து எனக்கு ஸலாம் கூறி “முஹம்மதே! ஜிப்ரீல் கூறியவாறே அல்லாஹ் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளான். நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்? நீங்கள் விரும்பினால் இவர்களை இரண்டு மலைகளையும் கொண்டு நசுக்கி விடுகிறேன்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) “அதை ஒருக்காலும் நான் விரும்ப மாட்டேன். மாறாக, அவர்களிலிருந்து அல்லாஹ்வை மட்டும் வணங்கி அவனுக்கு இணை வைக்காதவர்களை அவன் உருவாக்குவான் என்று நான் ஆதரவு வைக்கிறேன்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இந்த பதிலின் மூலம் நபி (ஸல்) அவர்களின் தனித்தன்மை தெரியவருவதுடன், அவர்கள் எத்தகைய மகத்தான பண்புள்ளவர்கள் என்பதையும் நாம் தெரிந்துகொள்ளலாம்.

ஏழு வானங்களுக்கு மேலிருந்து அல்லாஹ் அருளிய இம்மறைவான உதவியைப் பார்த்து நபி (ஸல்) அவர்களின் மனம் மிகவும் நிம்மதியடைந்தது. தொடர்ந்து மக்காவை நோக்கி பயணமாகும்போது ‘நக்லா’ என்ற பள்ளத்தாக்கில் சில நாட்கள் தங்கினார்கள். வாதி நக்லாவில் தங்குவதற்கு வசதியான தண்ணீரும் செழிப்புமுள்ள அஸ்ஸய்லுல் கபீர், ஜைமா என்ற இரு இடங்கள் இருந்தன. இவ்விரு இடங்களில் குறிப்பாக எந்த இடத்தில் நபி (ஸல்) அவர்கள் தங்கினார்கள் என்பதற்கு சரியான ஆதாரம் நமக்குக் கிடைக்கவில்லை.

நபி (ஸல்) அவர்கள் இவ்விடத்தில் தங்கியிருக்கும்போது சில ஜின்களை அல்லாஹ் நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தான். (ஸஹீஹுல் புகாரி)