பக்கம் - 381 -
முஸ்லிம்கள் எடுத்த இராணுவ நடவடிக்கைகளின் நோக்கம் என்னவெனில், குறைஷிகள் தங்களது வம்புத்தனத்தை விட்டும், அல்லாஹ்வின் பாதையிலிருந்து மக்களைத் தடுப்பதை விட்டும் விலகிக் கொள்ள வேண்டும் அனைவருடனும் சமாதானமாக நடந்து கொள்ள வேண்டும் ஒவ்வொருவரும் தங்களது வழியில் செயல்பட அனுமதிக்க வேண்டும் ஒருவர் மற்றவர் விஷயத்தில் குறுக்கிடக் கூடாது என்பதுதான்.

பத்து ஆண்டுகள் போர் நிறுத்தம் என சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டதால் குறைஷிகளின் வம்புத்தனம், அகம்பாவம், அல்லாஹ்வின் பாதையிலிருந்து மக்களைத் தடுத்தல் ஆகிய அனைத்திற்கும் ஒரு முடிவு கட்டப்பட்டது. மேலும், போரை இதுநாள் வரை முதலாவதாக ஆரம்பித்து வந்தவர்கள் இப்போது தோற்று விட்டனர் கோழையாகி விட்டனர் வலுவிழந்து விட்டனர் பின்வாங்கி விட்டனர் என்பதற்கு ஒப்பந்தத்தின் இவ்வம்சம் தெளிவான ஆதாரமாகி விட்டது.

ஒப்பந்தத்தின் முதல் அம்சம் (வரும் ஆண்டு மக்காவிற்கு வந்து மூன்று நாட்கள் தங்கலாம், இந்த ஆண்டு திரும்பி செல்ல வேண்டும்) இந்த அம்சம் இதுநாள் வரை முஸ்லிம்களைக் குறைஷிகள் சங்கைமிக்க அல்லாஹ்வின் பள்ளியிலிருந்து தடுத்து வந்ததற்கு ஒரு முடிவாக அமைந்தது. ஆகவே, இதுவும் குறைஷிகளுக்கு ஏற்பட்ட தோல்வியே ஆகும். இந்த அம்சத்தில் குறைஷிகளுக்கு சாதகமான, ஆறுதலான எதுவும் இருக்கவில்லை. ஆம்! அந்த ஆண்டு மட்டும் முஸ்லிம்களை மக்காவிற்கு வரவிடாமல் தடுக்க முடிந்ததைத் தவிர வேறெந்த சாதகமும் அவர்களுக்கு இருக்கவில்லை.

இவ்வாறு மூன்று அம்சங்களைக் குறைஷிகள் முஸ்லிம்களுக்குச் சாதகமாகக் கொடுத்தனர். இதற்கு மாற்றமாக நான்காவது அம்சத்தில் இடம்பெற்ற, அதாவது மக்காவிலிருந்து யாராவது தப்பித்து மதீனா வந்தால் அவர்களைத் திரும்ப மக்காவிற்கு அனுப்பி விடவேண்டும். ஆனால், மதீனாவிலிருந்து யாராவது தப்பித்து மக்கா வந்தால் அவர்களைத் திருப்பி அனுப்ப மாட்டோம் என்ற ஒரே ஒரு அம்சத்தைத்தான் அவர்கள் தங்களுக்கு சாதகமாக பெற்றுக் கொண்டனர். ஆனால், இதுவும் அவர்களுக்கு உண்மையில் சாதகமானதோ, பயன் தருவதோ கிடையாது. இது ஒரு அற்பமான விஷயம். ஏனெனில், எந்த ஓர் உண்மை முஸ்லிமும் அல்லாஹ்வை விட்டோ, அவனது தூதரை விட்டோ, மதீனாவை விட்டோ விலகிச் செல்ல மாட்டார். அப்படி சென்றாலும் அதில் முஸ்லிம்களுக்கு எந்த ஒரு நஷ்டமும் இடையூறும் இல்லை.

இஸ்லாமை விட்டு உள்ளரங்கமாகவோ, வெளிரங்கமாகவோ வெளியேறியவன் மட்டுமே முஸ்லிம்களை விட்டும் விலகிச் சென்று நிராகரிப்பாளர்களுடன் சேர்ந்து கொள்வான். அப்படி ஒருவன் மார்க்கத்திலிருந்து வெளியேறி விட்டால் முஸ்லிம்களுக்கு அவனிடம் எந்தத் தேவையும் இல்லை. அவன் இஸ்லாமிய சமூகத்தை விட்டு பிரிந்து சென்று விடுவது, அதிலிருப்பதை விட மிகச் சிறந்ததே. இதைத்தான் நபியவர்கள் “யாரொருவர் நம்மிடமிருந்து விலகி அவர்களிடம் சென்று விடுவாரோ அல்லாஹ் அவரைத் தூரமாக்கி விடுவானாக” என்ற சொல்லின் மூலம் சுட்டிக் காட்டியுள்ளார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)