பக்கம் - 530 -
இவ்வாறே உம்மு ஹபீபா (ரழி) அவர்களைத் திருமணம் செய்தார்கள். இவர் அபூ ஸுஃப்யானின் மகளாவார். அபூ ஸுஃப்யான் இஸ்லாமுக்கும் முஸ்லிம்களுக்கும் செய்த கொடுமைகள் அனைவரும் அறிந்ததே. உம்மு ஹபீபாவை நபி (ஸல்) திருமணம் செய்தபின் அபூஸுஃப்யான் தனது தீய செயல்களிலிருந்து சற்றே பின்வாங்கினார்.

அதுபோலவே, பனூ நழீர் மற்றும் பனூ முஸ்தலக் ஆகிய இரு யூத வமிசங்களிலிருந்து ஸஃபிய்யா மற்றும் ஜுவைரியாவை மணமுடித்தார்கள். இதனால் இவ்விரு குலத்தாரும் நபி (ஸல்) அவர்களிடம் பகைமை காட்டிவந்ததை நிறுத்திக் கொண்டனர். அதுமட்டுமின்றி ஜுவைய்யா (ரழி) அவர்களினால் அவர்களது சமூதாயத்திற்குப் பெரும் நன்மைகளும் பலன்களும் கிடைத்தன. நபி (ஸல்) பெண்ணெடுத்த சமூகத்தார்களை அடிமையாக்கி வைப்பதா? என்று கைதிகளாக இருந்த அவர்களது சமூகத்தின் நூறு குடும்பத்தார்களை நபித்தோழர்கள் உரிமையிட்டார்கள். உள்ளங்களில் இந்த உதவி எவ்வளவு பெரியமாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இந்த பலன்களுக்கிடையில் மேலான மற்றும் ஒரு பலன் இத்திருமணங்களால் ஏற்படுகின்றது. அதன் விளக்கமாவது:

நபி (ஸல்) அவர்களுடைய சமுதாயத்தினர் ஒழுக்கம், பண்பாடு, கலாச்சாரம் மற்றும் சமூகத்தை அமைப்பதற்குத் தேவையான பண்புகளை அறியாதவர்களாக இருந்தனர். இத்தகைய சமுதாயத்தைப் பண்படுத்தவும், சீர்திருத்தவும் வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் பணிக்கப்பட்டார்கள்.

இஸ்லாமிய சமூகத்தின் அடிப்படை, ஓர் ஆண் அந்நியப் பெண்ணுடன் கலப்பதற்கு அனுமதி அளிக்கவில்லை. எனவே, ஆண்களால் பெண்களை முழுமையாக சீர்திருத்துவதென்பது இச்சட்டத்தைக் கவனித்து முடியாத ஒன்று. ஆனால், பெண்களையும் சீர்திருத்த வேண்டும் என்ற அவசியம் ஆண்களைச் சீர்திருத்த வேண்டும் என்ற அவசியத்தை விட சற்றும் குறைவானதல்ல மாறாக, அதைவிட மிக அதிகமானதே.

ஆகவே, மகத்தான இச்சீர்திருத்தப் பணியை நிறைவேற்ற அதற்குத் தகுதிவாய்ந்த மாறுபட்ட வயதும் திறமையும் கொண்ட பெண்களை தனக்குத் துணையாக தேர்ந்தெடுத்துக் கொள்வதைத் தவிர நபி (ஸல்) அவர்களுக்கு வேறு வழி கிடையாது. அப்போதுதான் வீட்டுப் பெண்களுக்கு ஒழுக்கப் பண்புகளையும் மார்க்கச் சட்டங்களையும் வழங்கலாம். அதன்மூலம் அவர்களை மற்ற கிராம, நகர, வாலிப, வயோதிகப் பெண்களுக்கு மார்க்கப் பயிற்சி தரும் ஆசிரியைகளாக உருவாக்க முடியும். அப்பெண்மணிகள் நபி (ஸல்) அவர்களின் சார்பாக பெண்ணினத்திற்கு மார்க்கத்தை எடுத்துரைக்கும் பொறுப்பையும் நிறைவேற்றுவார்கள்.

நபி (ஸல்) அவர்களின் மனைவிகளான முஃமின்களின் தாய்மார்கள், நபி (ஸல்) தங்கள் வீடுகளில் எப்படி இல்லற வாழ்க்கையை நடத்தினார்கள் என்ற செய்திகளை நமக்குத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள். இதில் அவர்களது பங்கு மகத்தானது. குறிப்பாக, நபி (ஸல்) அவர்களுடன் நீண்ட நாட்கள் வாழ்ந்த ஆயிஷா (ரழி) போன்ற துணைவியர் நபி (ஸல்) அவர்களின் சொல், செயல்களின் பெரும்பாலானவற்றை சமுதாயத்திற்குத் தெரிவித்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்களின் திருமணங்களில் ஒன்று ஊறிப்போன அறியாமைக் கால வழக்கத்தை தகர்ப்பதற்காக நடத்தப்பட்டது. அதாவது, அரபியர்களிடம் வளர்ப்பு மகனை பெற்ற மகனாக கருதும் வழக்கம் இருந்தது. பெற்ற மகனுக்குக் கொடுக்கும் உரிமைகளையும், கடமைகளையும் வளர்ப்பு மகனுக்கும் வழங்கினர். இவ்வழக்கம் அரபியர்களிடம் ஆழமாக வேரூன்றி இருந்தது. இதைக் களைவது இலகுவானதல்ல. திருமணம், விவாகரத்து, சொத்துரிமை போன்றவற்றில் இஸ்லாமின் சட்டங்களுக்கும் அடிப்படைகளுக்கும் இக்கொள்கை முரணாக இருக்கிறது.