பக்கம் -54-
குறைஷிப் பெண்கள் வெறியூட்டுகின்றனர்
குறைஷிப் பெண்களும் போரில் தங்களால் முடிந்த பங்காற்றினர். இப்பெண்களுக்கு ஹிந்த் பின்த்
உத்பா (அபூ ஸுஃப்யானின் மனைவி) தலைமையேற்று வழி நடத்தினார். தமது படை வீரர்களிடையே
சென்று மேளங்களை அடித்து பாட்டுப் பாடி உணர்வுகளைத் தூண்டினர். அம்பெறியும் வீரர்கள்,
ஈட்டியால் தாக்கும் வீரர்கள், வாள் வீசும் வீரர்கள், கொடியேந்தியிருந்த வீரர்கள் என
படையினர் அனைவரையும் கவர்ந்து அவர்களை ஆவேசப்படுத்தினர்.
கொடியேந்தியிருந்த வீரர்களைப் பார்த்து பின்வருமாறு கவிபாடினர்.
“அப்துத் தார் வமிசத்தினரே பாருங்கள்!
படையின் பிற்பகுதி பாதுகாவலர்களே பாருங்கள்!
வாளை வீசி நன்றாகப் போரிடுங்கள்!”
அடுத்து, தங்களது சமூகத்தினரைப் பார்த்து பின்வருமாறு கவிபாடி அவர்கள் போரில் ஆர்வத்துடனும்
வெறியுடனும் ஈடுபடத் தூண்டினர்.
“நீங்கள் எதிரிகளைப் பிளந்து சென்று வெற்றி கண்டால்
பட்டுக் கம்பளம் விரித்து ஆரத் தழுவி உங்களை வரவேற்போம்.
போரில் புறமுதுகிட்டால் அன்பிலார் பிரிவதைப் போல்
காதலின்றி உங்களைப் பிரிந்து விடுவோம்.”
போரின் முதல் தீ பிழம்பு
இரு படைகளும் சமீபமாயின. சண்டையிட நேரம் நெருங்கியது. இணைவைப்பவர்களின் கொடியை ஏந்தியிருந்த
தல்ஹா இப்னு அபூதல்ஹா போரின் முதல் தீப்பிழம்பை மூட்டினான். தன்னுடன் நேருக்குநேர்
மோத முஸ்லிம்களை அழைத்தவனாக படைக்கு முன் வந்தான். இவன் குறைஷிகளில் மிகப்பெரிய வீரனாக
இருந்தான். முஸ்லிம்கள் இவனை ‘கபிஷுல் கதீபா’ (படையின் முரட்டுக் கடா) என்று அழைத்தனர்.
இவன் வீரம் மிகைத்தவன் என்பதால் முஸ்லிம்கள் இவனுக்கு முன் வரத்தயங்கினர். ஆனால், நபித்தோழர்
ஜுபைர் (ரழி) சிங்கம் பாய்வது போல் ஓரே பாய்ச்சலாக இவன் மீது பாய்ந்து ஒட்டகத்தின்
மீது அவனுடன் ஏறிக் கொண்டார்கள். அவனுடன் சண்டை செய்து அவனைப் பூமியில் தள்ளி வாளால்
வெட்டிக் கொன்றார்கள்.
ஜுபைரின் வீரதீரத் தாக்குதலைப் பார்த்த நபியவர்கள் தக்பீர் முழங்க முஸ்லிம்கள் அனைவரும்
தக்பீர் முழங்கினர். நபி (ஸல்) அவர்கள் ஜுபைரைப் புகழ்ந்து “ஒவ்வொரு நபிக்கும் ஒரு
விசேஷமான தோழர் இருப்பார். எனது விசேஷத் தோழர் ஜுபைராவார்” என்று கூறினார்கள். (ஸீரத்துல்
ஹல்பிய்யா)
கொடியை சுற்றிக் கடும் போர்
இதைத் தொடர்ந்து போரின் தீ இரு தரப்பிலும் கடுமையாக மூண்டு போர்க்களத்தின் பல பகுதிகளிலும்
போர் வெடித்தது. குறிப்பாக, போரின் கடுமை இணைவைப்போரின் கொடியைச் சுற்றியே இருந்தது.
கொடியைச் சுமந்திருந்த தல்ஹா இப்னு அபூதல்ஹா கொலை செய்யப்பட்ட பின் அவனது சகோதரன் உஸ்மான்
இப்னு அபூ தல்ஹா அக்கொடியைப் பிடித்து போர் செய்ய முன்வந்தான். பெருமையுடன் பின்வருமாறு
ஒரு கவிதையைப் பாடினான்:
“கொடி பிடித்தோன் கடமையாவது
ஈட்டி குருதியால் நிறம் மாற வேண்டும்
அல்லது அது உடைய வேண்டும்.”
அவனுக்கு எவ்வித அவகாசமும் கொடுக்காமல் ஹம்ஸா இப்னு அப்துல் முத்தலிப் (ரழி) அவன் மீது
பாய்ந்து, அவனது புஜத்தில் கடுமையாக வெட்டினார்கள். அந்த வெட்டு அவனது கையை அவனது உடலிலிருந்து
தனியாக்கியதுடன், அவனது தொப்புள் வரை சென்றடைந்து அவனது குடல்கள் வெளியேறின. பின்பு
மற்றொரு சகோதரன் அபூ ஸஅது இப்னு அபூ தல்ஹா கொடியைச் சுமந்தான். அவனை நோக்கி ஸஅது இப்னு
அபூ வக்காஸ் (ரழி) அம்பெறிந்தார்கள். அந்த அம்பு அவனது தாடையின் கீழாகக் குத்திக் கிழித்து
வெளியேறியது. இதனால் அவனது நாவு வெளியேறியது. அடுத்த வினாடியே அவனும் செத்து விழுந்தான்.
பின்பு முஸாஃபிஉ இப்னு தல்ஹா இப்னு அபூதல்ஹா என்பவன் கொடியைத் தாங்கினான். அவனை ஆஸிம்
இப்னு ஸாமித் இப்னு அபுல் அஃப்லஹ் (ரழி) அம்பெறிந்துக் கொன்றார். அதற்குப் பின் அவனது
சகோதரன் கிலாஃப் இப்னு தல்ஹா இப்னு அபூதல்ஹா கொடியை ஏந்தினான். இவன் மீது ஜுபைர் இப்னு
அவ்வாம் (ரழி) பாய்ந்து அவனை வெட்டி வீழ்த்தினார்கள். அதற்குப் பின் இவ்விருவர்களின்
சகோதரன் ஜுலாஸ் இப்னு தல்ஹா இப்னு அபூதல்ஹா கொடியை ஏந்தினான். இவனை தல்ஹா இப்னு உபைதுல்லாஹ்
(ரழி) ஈட்டியால் குத்திக் கொன்றார்கள்.
இவ்வாறு அபூதல்ஹா எனப்படும் அப்துல்லாஹ் இப்னு உஸ்மான் இப்னு அப்து தான் குடும்பத்திலிருந்து
ஆறு நபர்கள் கொடிக்காகக் கொல்லப்பட்டனர். பின்பு, கொடியை அப்து தான் கிளையினரிடமிருந்து
அர்தா இப்னு ஷுரஹ்பீல் சுமந்தான். இவனை அலீ இப்னு அபூதாலிப் (ரழி) கொன்றார்கள். பின்பு,
அக்கொடியை ஷுரைஹ் இப்னு காள் அதை சுமந்து கொள்ள அவனைக் குஸ்மான் வெட்டி வீழ்த்தினார்.
இந்த குஸ்மான் உண்மையில் நயவஞ்சகராக இருந்தார். அவர் மார்க்கத்திற்காகப் போர் செய்ய
வரவில்லை. மாறாக, தனது இனத்திற்கு உதவ வேண்டும் என்ற வெறியில்தான் வந்திருந்தார். பின்பு
கொடியை அம்ர் இப்னு அப்து மனாஃப் அல் அப்த சுமந்து கொள்ளவே அவரையும் குஸ்மான் வெட்டி
வீழ்த்தினார். பின்பு, கொடியை ஷுரஹ்பீல் இப்னு ஹாஷிம் அல் அப்தயின் மகன் ஒருவன் சுமந்து
கொள்ள அவனையும் குஸ்மான் வெட்டி வீழ்த்தினார்.
இவ்வாறு கொடியை சுமந்த அப்து தார் குடும்பத்தினர் பத்து நபர்களும் அழிக்கப்பட்டனர்.
இதற்குப் பின்பு அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் கொடியைத் தாங்கிக் கொள்ள
எவரும் இல்லாததால் அவர்களின் ஹபஷி அடிமை ஸுஆப் என்பவன் முன்வந்து கொடியைத் தாங்கிப்
பிடித்து தனது எஜமானர்களை விட வீரத்துடன் போரிட்டான். போரில் அவனது இரு கரங்களும் துண்டிக்கப்படவே
கொடியின் மீது மண்டியிட்டு அமர்ந்து கீழே விழுந்து விடாமல் பாதுகாக்க, அதைத் தனது நெஞ்சோடும்
கழுத்தோடும் அணைத்துக் கொண்டான். இறுதியில், அவன் கொல்லப்பட்டபோது “அல்லாஹ்வே! நான்
முடிந்தவரை முயற்சி செய்தேன். என்மீது இனி குற்றமில்லை அல்லவா!” என்று கூறியவனாகவே
செத்தான்.
இவ்வடிமை ஸுஆப் கொல்லப்பட்டதற்குப் பின் எதிரிகளின் கொடி பூமியில் சாய்ந்தது. அதைச்
சுமப்பதற்கு யாரும் இல்லாததால் இறுதி வரை அது கீழேயே கிடந்தது.
மற்ற பகுதிகளில் சண்டை
இணைவைப்பவர்களின் கொடியைச் சுற்றி போர் கடினமாக நடந்ததைப் போன்று போர்க் களத்தின் மற்ற
பகுதிகளிலும் உக்கிரமான போர் நடந்தது. முஸ்லிம்கள் எதிரிகளின் படையை ,இறைநம்பிக்கை
எனும் பலத்துடன் மிகத் துணிச்சலாக எதிர்கொண்டு அவர்களைத் திக்குமுக்காட வைத்தனர். தங்களுக்கு
மத்தியில் ‘அம்த் அம்த்’ என்ற இரகசிய அடையாள வார்த்தையை கூறிக்கொண்டே எதிரிகளின் படையைப்
பிளந்துச் சென்றனர்.
சிவப்புத் தலைப்பாகை அணிந்து, நபி (ஸல்) அவர்களின் வாளை ஏந்தி, அதன் கடமையை நிறைவேற்ற
வேண்டுமென உறுதி கொண்டிருந்த அபூ துஜானா (ரழி) எதிரிகளின் படைக்குள் புகுந்து தனக்கு
எதிரே வந்த ஒவ்வொரு எதிரியையும் வெட்டி வீழ்த்தினார்.
இதைப் பற்றி ஜுபைர் இப்னு அவ்வாம் (ரழி) பின்வருமாறு கூறுகிறார்கள்:
நபியவர்களிடம் வாளை நான் கேட்டபோது அதை எனக்கு அளிக்காமல் அபூ துஜானாவுக்கு கொடுத்ததைப்
பற்றி எனக்குக் கவலையாக இருந்தது. நான் நபியவர்களின் மாமி ஸஃபிய்யாவின் மகன் குறைஷிக்
குலத்தைச் சேர்ந்தவன். அவரை விட முந்தி அந்த வாளை நபியவர்களிடம் நான்தான் கேட்டேன்.
ஆனால் என்னை விட்டுவிட்டு நபியவர்கள் அவருக்கு அந்த வாளை கொடுத்தார்கள். அல்லாஹ்வின்
மீது சத்தியமாக! அப்படி என்னதான் அபூதுஜானா செய்துவிடப் போகிறார் என்று பார்ப்போம்?!
என்று எனக்குள் கூறிக்கொண்டு அவரைத் தொடர்ந்து கவனித்தேன். அவர் சிவப்பு தலைப்பாகையை
எடுத்து அணிந்தார். இதைப் பார்த்த மதீனாவாசிகள் “அபூ துஜானா மரணத்தின் தலைப்பாகையை
எடுத்துவிட்டார்” என்று கூறினார்கள்.
அதை அணிந்துகொண்ட அபூதுஜானா பின்வருமாறு கவிதையைப் பாடி, போரில் குதிக்கலானார்:
“பேரீச்சந்தோட்டத்திலே நண்பர் என்னிடம் ஒப்பந்தம் செய்தார்.
அல்லாஹ் மற்றும் தூதருடைய வாளால் நான் போரிடுவேன்.
ஒருபோதும் படையின் பிற்பகுதியில் நில்லேன்.”
அவர் சண்டையிட்ட எவரையும் கொல்லாமல் விடவில்லை. போர்க்களத்தில் இணை வைப்பவர்களில் ஒருவன்
எங்களில் காயமடைந்தவர்களைத் தேடிச் சென்று அவர்களைத் தொல்லை செய்து கொண்டிருந்தான்.
அபூ துஜானா (ரழி) அவனுக்கு அருகில் சென்ற போது “அல்லாஹ்வே! அவ்விருவரையும் சந்திக்க
வை” என்று நான் பிரார்த்தித்தேன். அவ்வாறே அபூ துஜானாவும் அந்த எதிரியும் சந்தித்து
சண்டையிட்டனர். எதிரி அபூ துஜானாவை வெட்ட வந்த போது அபூ துஜானா (ரழி) தனது கேடயத்தால்
அதைத் தடுத்தார். அவனது வாள் அபூ துஜானாவுடைய கேடயத்துக்குள் சிக்கிக் கொண்டது. உடனே
அபூ துஜானா (ரழி) தனது வாளால் அவனை வெட்டி வீழ்த்தினார். (இப்னு ஹிஷாம்)
பின்பு அபூதுஜானா (ரழி) எதிரிகளின் அணியைக் கிழித்துக் கொண்டு செல்லுகையில் குறைஷிப்
பெண்களின் தளபதி ஹிந்து“க்கருகில் செல்ல நேர்ந்தது. ஆனால், அவருக்கு அவர் யார் என்று
தெரியாது. இதைப் பற்றி அபூ துஜானாவே கூறுகிறார்:
போருக்கு மக்களை பயங்கரமாகத் தூண்டிக் கொண்டிருக்கும் ஒருவரை நான் பார்த்தேன். நான்
அவரை முன்னோக்கிச் சென்று அவர் மீது என் வாளை வீச எண்ணிய போது அவர் என் பக்கம் திரும்பினார்.
அவரைப் பெண் என்று அறிந்து கொண்ட நான் ஒரு பெண்ணைக் கொலை செய்து நபியவர்கள் கொடுத்த
வாளின் கண்ணியத்தைக் குறைத்து விடக்கூடாது என்பதற்காக அவளைக் கொல்லாமல் விட்டுவிட்டேன்.
அந்தப் பெண் ஹிந்த் பின்த் உத்பாவாகும். இதைப் பற்றி ஜுபைர் இப்னு அவ்வாம் (ரழி) கூறுகிறார்கள்:
அபூதுஜானா ஹி ந்துடைய தலையின் நடுப் பகுதிக்கு வாளை கொண்டு சென்று விட்டு திருப்பிவிட்டார்.
இதைக் கண்ட நான் “அபூதுஜானா ஏன் இவ்வாறு செய்தார்? அல்லாஹ்வும் அவனது தூதரும்தான் நன்கறிந்தவர்கள்
என்று எனக்குள் கூறிக் கொண்டேன்.” (இப்னு ஹிஷாம்)
ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழி) சிங்கம் பாய்ந்து தாக்குவதைப் போரில் எதிரிகளைப்
பாய்ந்து தாக்கியவராக எதிரிப்படையின் நடுப்பகுதிக்குள் சென்றுவிட்டார். அவருக்கு முன்
எதிர்த்து நின்ற வீரமற்ற எதிரிகள் புயல் காற்றில் இலைகள் பறப்பது போன்று அவரைப் பார்த்து
விரண்டனர். இணைவைப்பாளர்களின் கொடியை சுமந்திருந்தவர்களை அழிப்பதில் ஹம்ஜா (ரழி) எடுத்துக்
கொண்ட பங்கைப் பற்றி இதற்கு முன்பே நாம் கூறியிருக்கின்றோம். இறுதியாக, முன்னணி வீரர்களில்
இருந்த இவர் கொல்லப்பட்டார். போர் மைதானத்தில் இவருடன் நேருக்கு நேர் போரிட்டு கொல்ல
சக்தியற்ற எதிரிகள் கோழைத்தனமானத் தாக்குதல் நடத்தி இவரை வஞ்சகமாகக் கொன்றனர்.
அல்லாஹ்வின் சிங்கம் வீர மரணம்
அல்லாஹ்வின் சிங்கம் ஹம்ஜா (ரழி) அவர்களைக் கொன்ற வஹ்ஷி இப்னு ஹர்ப் அது குறித்து கூறுகிறார்:
நான் ஜுபைர் இப்னு முத்ம்மின் அடிமையாக இருந்தேன். அவனது தந்தையின் சகோதரன் துஅய்மா
இப்னு அதீ பத்ர் போரில் கொல்லப்பட்டான். குறைஷிகள் உஹுத் போருக்குப் புறப்பட ஆயத்தமான
போது ஜுபைர் என்னிடம் “முஹம்மதுடைய சிறிய தந்தை ஹம்ஜாவை நீ கொன்றுவிட்டால் உன்னை நான்
உரிமையிட்டு விடுகிறேன்” என்று கூறினான். நான் மக்களுடன் சேர்ந்து புறப்பட்டேன். ஹபஷிகள்
திறமையாக ஈட்டி எறிவது போரில் நானும் ஈட்டி எறிவதில் திறமையானவன். நான் எறியும் ஈட்டி
மிகக் குறைவாகவே இலக்கைத் தவறும். போர் மூண்டபோது நான் ஹம்ஜாவைத் தேடி அலைந்தேன். வீரர்களுக்கு
மத்தியில் அவரைச் சாம்பல் நிற ஒட்டகத்தைப் போன்று பார்த்தேன். அவர் படை வீரர்களைப்
பிளந்து கொண்டிருந்தார். அவருக்கு முன் நிற்பதற்கு எவருக்கும் துணிவு வரவில்லை. நான்
அவரைக் கொல்ல நாடி அதற்காக ஆயத்தமானேன். அவர் எனக்கருகில் வரும் வரை ஒரு மரம் அல்லது
ஒரு பாறைக்குப் பின் மறைந்து கொள்ள நாடினேன். ஆனால், திடீரென ஸிபா இப்னு அப்துல் உஜ்ஜா
ஹம்ஜாவுக்கு முன் வந்தான். அவனைப் பார்த்த ஹம்ஜா (ரழி) அவனுக்குக் கோபமூட்டுவதற்காக
“ஓ ஆணுறுப்பின் தோலை வெட்டுபவளின் மகனே! என்னருகில் வா!” என்றழைத்தார்கள். (அவனது தாய்
கத்னா செய்யும் தொழில் செய்து வந்தாள்.) அவன் அருகில் வந்தவுடன் ஹம்ஜா (ரழி) அவனது
தலையை உடம்பிலிருந்து தனியாக்கினார்.
தொடர்ந்து வஹ்ஷி கூறுகிறார்: நான் நல்ல தருணம் பார்த்து எனது சிறிய ஈட்டியால் அவரை
நோக்கி எறிந்தேன். அது அவரது தொப்புளுக்கு அருகில் குத்திக் குடலைக் கிழித்து அவரது
மர்மஸ்தானத்தின் பக்கமாக வெளியாகியது. அவர் என்னை நோக்கி வர முயற்சி செய்தார். ஆனால்
அவரால் வர முடியவில்லை. நான் அவரை அதே நிலையில் விட்டுவிட அவர் இறந்துவிட்டார். பின்பு
சிறிது நேரம் கழித்து அவரிடம் வந்து எனது ஈட்டியை எடுத்துக் கொண்டு கூடாரத்தில் வந்து
அமர்ந்து கொண்டேன். இவரைத் தவிர மற்றவர்களை கொல்ல வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை.
இவரை நான் கொன்றது எனக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான். அது போல் போர்
முடிந்து மக்கா திரும்பியதும் எனக்கு விடுதலை கிடைத்தது. (ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம்)