பக்கம் -57-
எதிரிகளின் தாக்குதல் வேகமாகுதல்
நபி (ஸல்) அவர்களைத் தாக்க விரைந்த எதிரிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு நேரமும் அதிகரித்தவாறே
இருந்தது. அவ்வாறே படையின் மற்ற பகுதிகளிலும் முஸ்லிம்கள் மீதும் எதிரிகளின் தாக்குதல்
கடுமையானது. ‘அபூ ஆமிர்’ என்ற எதி, போர் மைதானத்தின் பல இடங்களில் தோண்டி வைத்திருந்த
பள்ளங்கள் ஒன்றில் நபி (ஸல்) அவர்கள் விழுந்து விட்டார்கள். அதில் அவர்களது மூட்டுக்கால்
காயமடைந்தது. பிறகு அலீ (ரழி) அவர்களின் உதவியால் நபியவர்கள் பள்ளத்திலிருந்து மேலே
எழுந்தார்கள்.
இப்போரில் கலந்த முஹாஜிர்களில் ஒருவர் போரின் நிலைமை குறித்து விவரிக்கிறார்: “நான்
உஹுத் போரில் கலந்து கொண்டேன். நபி (ஸல்) அவர்களை நோக்கி அம்புகள் ஒவ்வொரு திசையிலிருந்தும்
எறியப்பட்டன. ஆனால், அவை நபியவர்களைத் தாக்கிவிடாமல் அல்லாஹ் பாதுகாத்தான். எதிரிகளில்
ஒருவனான இப்னு ஷிஹாப் ஜுஹ் என்பவன் “எனக்கு முஹம்மதைக் காட்டுங்கள். அவர் உயிருடன்
தப்பித்தால் நான் தப்பிக்க முடியாது” என்று கத்திக் கொண்டிருந்தான். அப்போது நபியவர்கள்
அவனுக்கு அருகில்தான் இருந்தார்கள். எனினும், அவனால் அவர்களைப் பார்க்க முடியவில்லை.
சிறிது நேரத்திற்குப் பின் நபியவர்கள் வேறு பக்கம் சென்றுவிட்ட போது, “உனக்கு அருகில்தானே
முஹம்மது இருந்தார். அவரை நீ கொன்று இருக்கலாமே” என்று எதிரிப் படையின் தளபதிகளில்
ஒருவரான ஸஃப்வான் இப்னு ஷிஹாப் இடம் கூறினார். அதற்கு “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான்
அவரைப் பார்க்கவில்லையே! அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து நான் சொல்கிறேன். அவர் நம்மிடமிருந்து
காப்பாற்றப்பட்டு விட்டார். நாங்கள் நான்கு நபர்கள் அவரைக் கொல்ல வேண்டும் என்ற உறுதியுடன்
அவரைத் தேடி அலைந்தோம். ஆனால், எங்களால் அவரருகில் செல்ல முடியவில்லை” என்று இப்னு
ஷிஹாப் கூறினான். (ஜாதுல் மஆது)
செயற்கரிய வீரதீரச் செயல்கள்
முஸ்லிம்கள் இந்நாளில் வரலாறு காணாத அற்புதமான வீரதீரச் செயல்களையும் தியாகங்களையும்
புரிந்தார்கள். அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்:
நபி (ஸல்) அவர்களுக்கு முன் அபூ தல்ஹா (ரழி) தன்னையே தடுப்பாக ஆக்கி நெஞ்சை நிமிர்த்தி
எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து நபியவர்களைப் பாதுகாத்தார்கள்.
இதைப் பற்றி அனஸ் (ரழி) கூறுகிறார்கள்: உஹுத் போர் அன்று அபூ தல்ஹா (ரழி) நபியவர்களுக்கு
முன்பாக நின்று தனது கேடயத்தால் நபியவர்களைப் பாதுகாத்துக் கொண்டு இருந்தார்கள். அபூ
தல்ஹா (ரழி) மிக வேகமாக அம்பெறியும் திறமை பெற்றவர்கள். அன்றைய தினத்தில் மட்டும் அவரது
கரத்தில் இரண்டு அல்லது மூன்று வில்கள் உடைந்தன. ஒருவர் அபூ தல்ஹாவுக்கு அருகில் அம்புக்கூட்டுடன்
சென்ற போது “அதை அபூ தல்ஹாவுக்குக் கொடு!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும்.
நபியவர்கள் எதிரிகளின் நிலையை அறிந்து கொள்ள அவ்வப்போது தங்களது தலையை உயர்த்திப் பார்த்துக்
கொண்டிருந்தார்கள். அப்போது அபூ தல்ஹா (ரழி) “எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்!
நீங்கள் எட்டிப் பார்க்காதீர்கள் எதிரிகளின் அம்பு உங்களைத் தாக்கிவிடலாம் உங்களது
நெஞ்சுக்கு முன் எனது நெஞ்சு இருக்கட்டும்” என்று கூறுவார்கள். (ஸஹீஹுல் புகாரி)
அனஸ் (ரழி) கூறுகிறார்கள்: அபூதல்ஹா (ரழி) ஒரு கேடயத்தால் நபி (ஸல்) அவர்களைப் பாதுகாத்துக்
கொண்டிருந்தார். அவர் திறமையாக அம்பெறிபவராக இருந்தார். அவர் அம்பெறியும் போது அந்த
அம்பு எங்கே விழுகிறது என்று நபியவர்கள் தலையை உயர்த்திப் பார்ப்பார்கள். (ஸஹீஹுல்
புகாரி)
அபூ துஜானா பலமிக்க இரும்பு கவச ஆடை அணிந்திருந்தார். நபி (ஸல்) அவர்களை நோக்கி வரும்
அம்புகளைத் தன் முதுகை கேடயமாக்கி தடுத்துக் கொள்வார்.
நபி (ஸல்) அவர்களின் பல்லை உடைத்து விட்டு குதிரைமேல் வேகமாகச் சென்றுக் கொண்டிருந்தான்
உத்பா இப்னு அபீ வக்காஸ். இவனை ஹாத்திப் இப்னு அபீ பல்தஆ (ரழி) பின்தொடர்ந்துச் சென்று
அவனது தலையை வெட்டி வீசினார். பிறகு அவனது குதிரையையும் வாளையும் எடுத்து வந்தார்.
இவன் நபியவர்களின் பாதுகாவலரான ஸஅது இப்னு அபீ வக்காஸ் (ரழி) அவர்களின் சகோதரனாவான்.
இவனைத் தீர்த்து கட்ட ஸஅது (ரழி) ஆர்வமாக இருந்தார். ஆனால், அந்த வாய்ப்பு அவர்களுக்குக்
கிடைக்கவில்லை. ஹாத்திப் (ரழி) அந்த வாய்ப்பைத் தட்டிச் சென்றார்.
அம்பெறிவதில் திறமை பெற்ற வீரர்களில் ஒருவரான ஸஹ்ல் இப்னு ஹுனைஃப் (ரழி) மரணம் வரை
போர் புரிவேன் என்று நபி (ஸல்) அவர்களிடம் இப்போருக்கிடையில் வாக்குப் பிரமாணம் செய்தார்
இவர் இப்போரில் எதிரிகளை விரட்டி அடிப்பதில் பெரும் பங்காற்றினார்.
அன்றைய தினம் நபி (ஸல்) அவர்களும் அம்பெறிந்தார்கள். இது குறித்து கதாதா இப்னு நுஃமான்
(ரழி) அறிவிக்கின்றார்கள்: வில்லின் நரம்பு அறுபடும் வரை நபி (ஸல்) அவர்கள் அம்பெறிந்தார்கள்.
அறுந்துவிட்ட அந்த வில்லை கதாதா இப்னு நுஃமான் (ரழி) தன்னிடம் வைத்திருந்தார்கள்.
கதாதாவின் கண்ணில் ஏற்பட்ட காயத்தால் அது பிதுங்கிவிட்டது. நபி (ஸல்) அவர்கள் அதை தனது
கையால் அவரது கண்குழியில் வைத்து பிரார்த்தித்தாhர்கள். அது மிக அழகியதாகவும் கூர்ந்த
பார்வை உடையதாகவும் அமைந்து விட்டது.
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) மிக மும்முரமாகப் போர் செய்தார். அவரது வாயில்
பலத்த காயம் ஏற்பட்டு பல் உடைந்தது. இருபதுக்கும் அதிகமான காயங்கள் அவருக்கு ஏற்பட்டன.
அவற்றில் சில காலில் ஏற்பட்டதால் அவரால் சில காலம் வரை நடக்க முடியவில்லை.
முஸ்லிம்களிடம் சண்டை செய்து கொண்டிருந்த இப்னு கமிஆவிடம் நபித்தோழியரான உம்மு அமாரா
(ரழி) மோதினார். அவன் இவரது புஜத்தில் வெட்டியதால் இவருக்கு பெரும் காயம் ஏற்பட்டது.
இவரும் அவனைப் பலமுறை வாளால் தாக்கினார்கள். ஆனால், அவன் மீது இரண்டு கவச ஆடைகள் இருந்ததால்
அவன் தப்பித்துக் கொண்டான். இப்போரில் உம்மு அமாராவுக்கு 12 பலத்த காயங்கள் ஏற்பட்டன.
முஸ்அப் இப்னு உமைரும் போரில் தனது முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி எதிரிகளுடன் சளைக்காமல்
சண்டையிட்டார். தனது கையில் கொடியை ஏந்திக் கொண்டு நபி (ஸல்) அவர்களைத் தாக்கச் சென்று
கொண்டிருந்த இப்னு கமிஆ மற்றும் அவனது நண்பர்களை எதிர்த்து சண்டையிட்டார். அவர்கள்
முஸ்அபின் வலக்கரத்தை வெட்டிவிடவே கொடியை தனது இடக்கரத்தால் பற்றிக் கொண்டார். பின்பு,
இடது கையையும் வெட்டிவிடவே மண்டியிட்டு தனது கழுத்தாலும் நெஞ்சாலும் அதை அணைத்துக்
கொண்டார். முஸ்அப் தோற்றத்தில் நபியவர்களைப் போன்று இருந்தார். எனவே, எதிரி இப்னு கமிஆ
முஸ்அபைக் கொன்றுவிட்டு, தான் நபியவர்களைக் கொன்றதாக எண்ணி, இணைவைப்பவர்களிடம் சென்று
“நிச்சயமாக முஹம்மது கொல்லப்பட்டார்” என்று கூச்சலிட்டான். (இப்னு ஹிஷாம்)
நபியவர்கள் கொல்லப்பட்ட வதந்தி - அதன் விளைவு!
இவன் கூச்சலிட்ட சில நிமிடங்களிலேயே நபி (ஸல்) அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி
இணைவைப்பவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு மத்தியில் பரவியது. இந்நேரத்தில் எதிரிகளால்
சூழப்பட்ட பெரும்பாலான முஸ்லிம்களின் உறுதி குலைந்தது. அவர்களுக்கு மத்தியில் பெரும்
குழப்பமும் சலசலப்பும் ஏற்பட்டது. எனினும், இந்த வதந்தியால் எதிரிகளின் தாக்குதல் சற்றே
தணிந்தது. அதற்குக் காரணம், நபியவர்களைக் கொல்ல வேண்டும் என்ற தங்களது நோக்கத்தில்
வெற்றி பெற்று விட்டோம் என்று அவர்கள் எண்ணினர். ஆகவே, தாக்குதலைக் குறைத்துக் கொண்டு
போரில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் உடல்களைச் சிதைப்பதில் ஈடுபட்டனர்.
நபியவர்கள் போரை தொடர்கிறார்கள்
முஸ்அப் கொல்லப்பட்டவுடன் நபி (ஸல்) அவர்கள் கொடியை அலீ இப்னு அபூதாலிபிடம் வழங்கினார்கள்.
நபியவர்களிடமிருந்து கொடியை வாங்கிய அலீ (ரழி) கடுமையாக எதிரிகளை தாக்கி கதிகலங்க வைத்தார்கள்.
அங்கிருந்த மற்ற நபித்தோழர்களும் எதிரிகளை எதிர்த்து சண்டையிடுவதிலும், முஸ்லிம்களைப்
பாதுகாப்பதிலும் தீவிரமாயினர்.
எதிரிகளால் சூழப்பட்டிருந்த முஸ்லிம்களைக் காப்பாற்றுவதற்காக தன்னுடன் இருந்த சிறு
படையை அழைத்துக் கொண்டு எதிரிகளின் படையை நபி (ஸல்) அவர்கள் பிளந்தார்கள். அப்போது
நபியவர்களை முஸ்லிம்களில் கஅப் இப்னு மாலிக் (ரழி) முதன் முதலாக பார்த்து விட்டு மிக
உயர்ந்த சப்தத்தில் “முஸ்லிம்களே! நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள். இதோ... அல்லாஹ்வின்
தூதர் வந்து விட்டார்கள்” என்று உரக்கக் கூறினார். தன்னை எதிரிகள் தெரிந்து கொள்ளக்
கூடாது என்பதற்காக கஅபிடம் அமைதியாக இரு! என்று நபியவர்கள் சைகை செய்தார்கள். எனினும்,
முஸ்லிம்களின் காதுகளுக்குக் கஅபின் குரல் எட்டிவிடவே நபியவர்களை நோக்கி முப்பது தோழர்கள்
ஒன்று கூடினர்.
இவ்வாறு தோழர்களின் பெரும் கூட்டம் ஒன்று சேர்ந்த பின், தாக்கிக் கொண்டிருக்கும் எதிரிகளை
விளக்கியவர்களாக தங்களது படையை மலை கணவாய்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அழைத்துச் சென்றார்கள்.
நபியவர்களின் இத்திட்டத்தைத் தடுக்க எதிரிகள் பல வழிகளிலும் போராடினர். இருந்தும் இஸ்லாமியச்
சிங்கங்களின் வீரத்திற்கு முன் அவர்கள் அனைவரும் தோல்வியையே கண்டனர்.
இணைவைப்பவர்களின் குதிரை வீரர்களில் ஒருவனான உஸ்மான் இப்னு அப்துல்லாஹ் இப்னு முகீரா
என்பவன் நபி (ஸல்) அவர்களை நோக்கி “இவர் தப்பித்தால் நான் தப்பிக்க முடியாது” என்று
கூறிக்கொண்டே விரைந்து வந்தான். நபியவர்கள் அவனை எதிர்ப்பதற்குத் ஆயத்தமானார்கள். ஆனால்
வழியிலிருந்த பள்ளத்தில் அவனது குதிரை தடுமாறி விழுந்தது. ஹாரிஸ் இப்னு சிம்மா (ரழி)
அவனை எதிர்கொண்டு அவனது காலில் வெட்டினார்கள். அதனால் அவனால் எழுந்திருக்க முடியவில்லை.
பின்பு அவன் மீது பாய்ந்து அவனது கதையை முடித்துவிட்டு, அவனது ஆயுதத்தை எடுத்துக்கொண்டு
நபியவர்களிடம் வந்தார்கள்.
இக்காட்சியைப் பார்த்த மக்காவின் குதிரை வீரர்களில் மற்றொருவனான அப்துல்லாஹ் இப்னு
ஜாபிர் என்பவன் ஹாரிஸ் இப்னு சிம்மாவிடம் சண்டையிட்டான். அவரது புஜத்தை வெட்டிக் காயப்படுத்தினான்.
அவரை அவன் கொல்வதற்கு முன் முஸ்லிம்கள் அவரைப் பாதுகாத்துக் கொண்டார்கள். ஹாரிஸ் தாக்கப்பட்டதை
பார்த்து கொதித்தெழுந்த அஞ்சா நெஞ்சன், வீராதி வீரர் அபூ துஜானா (ரழி) எதிரி அப்துல்லாஹ்
இப்னு ஜாபின் தலையைக் கண் சிமிட்டும் நொடியில் வெட்டி வீசினார்.
போர் இவ்வளவு கடுமையாகவும் உக்கிரமாகவும் நடந்து கொண்டிருந்த வேளையில் அல்லாஹுத் தஆலா
முஸ்லிம்களுக்கு நிம்மதியளிக்கும் பொருட்டு சிறு தூக்கத்தை இறக்கினான். இதைப் பற்றி
திருமறையிலும் கூறப்பட்டுள்ளது. இதோ... அபூதல்ஹா (ரழி) அது பற்றி கூறுகிறார்:
“உஹுத் போரில் சிறு தூக்கம் பீடித்தவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். எனது கையிலிருந்து
பலமுறை வாள் வீழ்ந்தது நான் அதை எடுக்கிறேன் அது கீழே விழுகிறது நான் அதை எடுக்கிறேன்
அது கீழே விழுகிறது.” (ஸஹீஹுல் புகாரி)
இவ்வாறு அல்லாஹ் பெரிய துன்பமான சமயத்திலும் முஸ்லிம்களுக்கு மன நிம்மதியை வழங்கினான்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு வழியாக எதிரிகளுடன் போராடி தன்னுடன் இருந்த முஸ்லிம்களை மலைக்
கணவாய்க்கு அருகில் திட்டமிட்டவாறு ஒதுக்கிக் கொண்டார்கள். மேலும், மற்ற இஸ்லாமியப்
படைகளும் இந்தப் பாதுகாப்பான இடத்திற்கு வந்து சேர வழி ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.
இவ்வாறு நபி (ஸல்) அவர்களின் போர்த் திறமைக்கு முன் காலிதின் போர்த் திறமை தோற்றது.
சண்டாளன் ‘உபை’ கொல்லப்படுதல்
நபி (ஸல்) அவர்கள் மலைக் கணவாயில் தங்களையும் தோழர்களையும் பாதுகாத்துக் கொண்ட போது
உபை இப்னு கலஃப் “முஹம்மது எங்கே! அவர் தப்பித்துக் கொண்டால் நான் தப்பிக்க முடியாது”
என்று அலறியவனாக நபியவர்களைத் தேடி அலைந்தான். அப்பொழுது அவன் நபியவர்களைப் பார்த்துவிட
கொலை வெறியுடன் அவர்களை நோக்கி விரைந்தான். தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! எங்களில்
ஒருவர் சென்று அவனைத் தாக்கட்டுமா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) “அவனை விட்டு
விடுங்கள். அவன் என்னருகில் வரட்டும்” என்றார்கள். அவன் நபியவர்களுக்கு அருகில் நெருங்கிய
போது ஹாரிஸ் இப்னு சிம்மாவிடமிருந்து ஒரு சிறிய ஈட்டியை வாங்கி நபியவர்கள் தனது உடலைச்
சிலிர்த்தார்கள். எப்படி ஒட்டகம் சிலிர்க்கும் போது அதனுடைய முதுகிலிருந்து முடி பறக்குமோ,
அதுபோன்று மக்கள் நபி (ஸல்) அவர்களை விட்டு பறந்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் அவனை
முன்னோக்கி அவன் அணிந்திருந்த கவச ஆடைக்கும் தலைக் கவசத்திற்குமிடையே தெரிந்த அவனது
கழுத்தைக் குறி பார்த்து ஈட்டியை எறிந்தார்கள். அந்த ஈட்டி அவனது கழுத்தை உராய்ந்து
சென்று சிறிய காயத்தை ஏற்படுத்தியது. ஆனால், அதனால் ஏற்பட்ட வலியோ மிகக் கடுமையாக இருந்தது,
அவன் ஒட்டகத்தில் அமர முடியாமல் பலமுறை கீழே விழுந்து எழுந்தான். அந்த சிறிய காயத்துடன்
குறைஷிகளிடம் திரும்பி “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! முஹம்மது என்னைக் கொன்று விட்டார்”
என்று சப்தமிட்டான். அதற்கு குறைஷிகள் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ பயந்துவிட்டாய்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உனக்கு ஏதோ கோளாறு ஏற்பட்டுவிட்டது. இல்லையென்றால் இந்த
சிறிய காயத்திற்குப்போய் இப்படி கூச்சல் போடுவாயா? என்று கூறி நகைத்தார்கள். அதற்கு
அவன் “முஹம்மது மக்காவில் இருக்கும்போதே நான் உன்னைக் கொல்வேன்! என்று கூறியிருந்தார்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! என்மீது அவர் துப்பியிருந்தாலும் நான் செத்திருப்பேன்”
என்று கூறினான். மாடு அலறுவது போன்று அவன் அலறினான். “எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ
அவன் மீது ஆணையாக! எனக்கு இருக்கும் வேதனையை இந்த “தில்மஜாஸிலுள்ள’ அனைவருக்கும் பிரித்துக்
கொடுத்தால் அவர்கள் அனைவரும் இறந்துவிடுவார்கள்” என்றான். மக்கா செல்லும் வழியில் ‘ஸஃப்’
என்ற இடத்தில் இவன் இறந்தான். (இப்னு ஹிஷாம்)