பக்கம் -59-

பத்ரில் சந்திக்க அழைத்தல்

மேற்கூறிய உரையாடலுக்குப் பிறகு உமர் (ரழி) திரும்பிவிட்டார்கள். அபூ ஸுஃப்யானும் அவரது படையும் மைதானத்தை விட்டு புறப்படும் போது “அடுத்த ஆண்டு பத்ர் மைதானத்தில் ஷஅபான் மாதம் நாம் உங்களைச் சந்திப்போம்” என்று முஸ்லிம்களுக்கு அறிக்கை விடுத்தார். நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களில் ஒருவருக்கு “ஆம்! அவ்வாறே ஆகட்டும் என்று சொல்” என்றார்கள். இவ்வாறு முடிவு செய்யப்பட்டப் பிறகு அபூ ஸுஃப்யான் படையுடன் மக்கா நோக்கிப் பயணமானார். (இப்னு ஹிஷாம்)

எதிரிகளின் நிலை அறிதல்

பின்பு நபி (ஸல்) அவர்கள் அலீ இப்னு அபீதாலிப் (ரழி) அவர்களை அனுப்பி “நீ இவர்களைப் பின்தொடர்ந்து செல் அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்களது நோக்கம் என்ன? என்று பார்த்து வர அவர்கள் ஒட்டகத்தில் வாகனித்து குதிரைகளை இழுத்துச் சென்றால் அவர்கள் மக்காவிற்கு செல்கிறார்கள் என்று பொருள் அவர்கள் குதிரையில் வாகனித்து ஒட்டகத்தை இழுத்துச் சென்றால் அவர்கள் மதீனாவை நோக்கிச் செல்கிறார்கள் என்று பொருள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள் மதீனா சென்றால் நான் அங்கு சென்று அவர்களுடன் போர் செய்வேன்” என்றார்கள்.

அலீ (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: “நான் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்க அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன். அவர்கள் ஒட்டகத்தில் வாகனித்துக் குதிரைகளை இழுத்துச் சென்றார்கள். அவர்களது பயணம் மக்கா நோக்கியே இருந்தது.” (இப்னு ஹிஷாம்)

தியாகிகளை கண்டெடுத்தல்

எதிரிகள் சென்றதற்குப் பின் கொல்லப்பட்டவர்களையும் காயமடைந்தவர்களையும் தேடுவதில் முஸ்லிம்கள் ஈடுபட்டனர். இதைப் பற்றி ஜைது இப்னு ஸாபித் (ரழி) இவ்வாறு கூறுகிறார்:

போர் முடிந்த பின் ஸஅது இப்னு ரபீஆவைத் தேடுவதற்காக நபி (ஸல்) அவர்கள் என்னை அனுப்பினார்கள். “நீ அவரைப் பார்த்து விட்டால் அவருக்கு எனது ஸலாம் கூறி, உனது நிலை என்னவென்று அல்லாஹ்வின் தூதர் விசாரிக்கிறார்கள்” என்று சொல்லுமாறு என்னைப் பணித்தார்கள். கொல்லப்பட்டவர்களிடையே அவர்களைத் தேடி அலைந்தேன். நான் அவரைப் பார்த்த போது அவர் இறுதி மூச்சுகளை எண்ணிக் கொண்டிருந்தார். அவருடைய உடலில் அம்பு, ஈட்டி, வாள் ஆகிய ஆயுதங்களால் ஏற்பட்ட எழுபது காயங்கள் இருந்தன. நான் அவரிடம் “ஸஅதே! அல்லாஹ்வின் தூதர் உனக்கு ஸலாம் கூறுகிறார்கள். மேலும், உமது நிலையை விசாரித்து வர என்னை அனுப்பினார்கள்” எனக் கூறினேன். அதற்கு “அல்லாஹ்வின் தூதர் மீதும் ஸலாம் உண்டாகட்டுமாக; அல்லாஹ்வின் தூதரே! நான் சுவனத்தின் நறுமணத்தை உணர்கிறேன் என நீர் நபியவர்களிடம் சொல் மேலும், உங்களில் ஒருவர் உயிருடன் இருக்கும் நிலையில் நபியவர்களின் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் உங்களுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது என்று என் நண்பர்களாகிய அன்சாரிகளிடம் நீ சொல்” என்று தனது இறுதி வார்த்தைகளை கூறிய பின் உயிர் நீத்தார். (ஜாதுல் மஆது)

காயமடைந்தவர்களில் உஸைம் என்றழைக்கப்படும் அம்ர் இப்னு ஸாபித் (ரழி) என்பவரும் ஒருவர். அவர் உயிர் பிரியும் நிலையில் இருந்தார். இதற்கு முன்பு அவருக்கு முஸ்லிம்கள் பலமுறை இஸ்லாமை எடுத்துக் கூறியும், அவர் அதை ஏற்றுக் கொள்ளாமல் மறுத்து வந்தார். இவரை இந்நிலையில் பார்த்த முஸ்லிம்கள் இந்த உஸைம் ஏன் இங்கு வந்தார்! நாம் போருக்கு வரும்போது அவருக்கு நமது மார்க்கம் பிடிக்காமல் இருந்ததே! என்று கூறியவர்களாக அவரிடம் “உமது இனத்தை பாதுகாக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் வந்தீரா? அல்லது இஸ்லாமை ஏற்று அதற்காக போர் புரிய வேண்டும் என்ற ஆர்வத்தில் வந்தீரா?” என விசாரித்தனர். அதற்கவர் “இல்லை! இஸ்லாம் மீதுள்ள பிரியத்தினால்தான் போரில் கலந்து கொண்டேன். நான் அல்லாஹ் வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டேன். அல்லாஹ்வின் தூதரோடு சேர்ந்து எதிரிகளிடம் போர் புந்தேன். இப்போது எனது நிலை என்னவென நீங்கள் பார்க்கிறீர்கள்” என்று தனது பேச்சை முடிக்க மரணம் அவரை ஆரத் தழுவியது.

இவரது நிலையை நபி (ஸல்) அவர்களிடம் முஸ்லிம்கள் கூறியதற்கு நபியவர்கள் அவர் சுவனவாசிகளில் ஒருவர் என்றார்கள்.

அபூஹுரைரா (ரழி) கூறுகிறார்: உஸைம் அல்லாஹ்விற்காக ஒரு நேரத் தொழுகை கூட தொழவில்லை (இருந்தும் நபியவர்களின் நாவினால் சுவனவாசி என்ற நற்செய்தி பெற்றார்.) (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

காயமடைந்தவர்களில் ‘குஜ்மான்’ என்பவரும் ஒருவர். அவர் மிகப்பெரும் வீரராய் போரில் சண்டையிட்டார். இவர் மட்டும் தனியாக ஏழு அல்லது எட்டு எதிரிகளைக் கொன்றார். இவருக்கு ஆழமான காயம் ஏற்படவே, பூமியில் விழுந்து கிடந்தார். இவரை முஸ்லிம்கள் ளஃபர் கிளையினரின் வீட்டுக்குத் தூக்கிச் சென்றனர். அவருக்கு முஸ்லிம்கள் நற்செய்தி கூறினர். அதற்கு அவர் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் இன வெறிக்காகத்தான் போரிட்டேன். இனவெறி மட்டும் இருக்கவில்லையெனில் நான் போரில் கலந்திருக்க மாட்டேன்” என்றார். பின்பு காயத்தின் வேதனை கடுமையாகவே அவர் தற்கொலை செய்து கொண்டார். இவரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் “இவர் நரகவாசிகளில் ஒருவர்” என்றார்கள். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

அல்லாஹுவின் ஏகத்துவக் கலிமாவை உயர்த்த வேண்டும் என்ற நோக்கமில்லாமல் இனவெறி அல்லது தேசப்பற்றுக்காக போர் புரிபவர்களின் முடிவு இதுதான். இவர்கள் இஸ்லாமியக் கொடியின் கீழ் போரிட்டாலும் அல்லது அதற்கும் மேலாக நபியவர்களின் படையிலிருந்தாலும் இவர்கள் செல்லுமிடம் நரகம்தான்.

மேற்க்கூறப்பட்ட நிகழ்ச்சிக்கு மாற்றமாக மற்றொரு நிகழ்ச்சியும் நடந்தது. அதாவது ஸஅலபா கிளையைச் சேர்ந்த யூதர்களில் ஒருவரும் போரில் கொல்லப்பட்டார். அவரது பெயர் முகைரீக். அவர் தனது இனத்தவரிடம் “யூதர்களே! அல்லாஹிவின் மீது ஆணையாக! முஹம்மதுக்கு உதவி செய்வது உங்களுக்கு மீது கட்டாயக் கடமை என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்தானே?” எனக் கூறினார். அதற்கவர்கள் “இன்றைய தினம் சனிக்கிழமை அல்லவா நாம் எப்படி போருக்கு செல்ல முடியும்?” என்று எதிர்கேள்வி கேட்டனர். “உங்களுக்கு சனிக்கிழமை என்பதே இல்லாமலாகட்டும்!” என்று கோபமாக கூறி தனது வாளையும் ஆயுதத்தையும் எடுத்துக்கொண்டு “நான் போரில் கொல்லப்பட்டு விட்டால் எனது செல்வங்கள் அனைத்தும் முஹம்மது அவர்களைச் சாரும் அதை அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ளலாம்” என்று கூறி, போரில் கலந்து வீரமரணமடைந்தார். இவரை பற்றிய செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு தெரியவர “முகைரீக் யூதர்களில் மிகச் சிறந்தவர்” என்று அவரை பற்றி கூறினார்கள். (இப்னு ஹிஷாம்)

தியாகிகளின் உடல்களை நல்லடக்கம் செய்தல்

போரில் உயிர்நீத்த தியாகிகளை முன்னோக்கி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நான் உங்களுக்கு சாட்சியாக இருப்பேன். அல்லாஹ்வின் பாதையில் காயமடைந்தவரை மறுமையில் அல்லாஹ் எழுப்பும் போது அவரது காயத்திலிருந்து இரத்தம் வடியும்; அதன் நிறம் இரத்தத்தின் நிறமாகத்தான் இருக்கும்; ஆனால் அதன் மணமோ கஸ்தூரி போன்று இருக்கும்.” (இப்னு ஹிஷாம்)

நபித்தோழர்களில் சிலர் தங்கள் குடும்பத்தில் கொல்லப்பட்டவர்களை மதீனாவிற்கு எடுத்து சென்றிருந்தனர். நபியவர்கள், அவர்களை மீண்டும் உஹுதுக்கு தூக்கி வரும்படி கூறி “அவர்களை குளிப்பாட்டக் கூடாது; அவர்கள் உடலிலுள்ள போருக்குரிய ஆயுதங்களைக் கழற்றிய பின், அவர்கள் கொல்லப்பட்ட இடங்களிலேயே அவர்களை அடக்க வேண்டும்” என்று கட்டளையிட்டார்கள். ஒரு கப்ரில் இரண்டு அல்லது மூன்று உடல்களை நபியவர்கள் அடக்கம் செய்தார்கள். மேலும், ஓரே ஆடையில் இருவரைப் போர்த்தினார்கள். யார் அதிகமாகக் குர்ஆனை மனனம் செய்தவர் என்று விசாரித்து அவரைப் கப்ரில் பக்கவாட்டுக் குழியில் முதலாவதாக வைத்தார்கள். அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஹராம், அம்ர் இப்னு ஜமூஹ் (ரழி) ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் நேசித்து வந்ததால் இருவரையும் ஓரே கப்ரில் அடக்கம் செய்தார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஜாதுல் மஆது)

முஸ்லிம்கள் ஹன்ளலாவைத் தேடிய போது அவரது உடல் ஒரு மூலையில் தண்ணீர் சொட்டிய நிலையில் இருந்தது. அதை அறிந்த நபி(ஸல்) அவர்கள் “வானவர்கள் அவரை குளிப்பாட்டுகிறார்கள்” என்று தங்களது தோழர்களிடம் கூறினார்கள். பின்பு “அவரது குடும்பத்தாரிடம் சென்று விவரம் அறிந்து வாருங்கள்” என்று கூறி அனுப்பினார்கள். தோழர்கள் அவரது மனைவியிடம் விசாரிக்க “ஹன்ளலா (ரழி) முழுக்குடைய நிலையில் (குளிக்க வேண்டிய நிலையில்) போரில் கலந்து கொண்டதாக” மனைவி கூறினார். இதன் காரணமாகத்தான் ஹன்ளலாவிற்கு ‘கஸீலுல் மலாயிக்கா‘ (மலக்குகள் குளிப்பாட்டியவர்) என்ற பெயர் வந்தது. (ஜாதூல் மஆது)

தனது சிறய தந்தையும், பால்குடி சகோதரருமாகிய ஹம்ஜாவின் நிலையைப் பார்த்தவுடன் நபி(ஸல்) அவர்கள் மிகுந்த கவலை அடைந்தார்கள். நபியவர்கள் மாமி ஸஃபிய்யாவின் மகன் ஜுபைரிடம் “அவரைத் தடுத்து திரும்ப செல்லுமாறு கூறுங்கள்” என்றார்கள். சகோதரருக்கு ஏற்பட்ட நிலைமையை அவர் பார்க்க வேண்டாம் என்பதற்காக நபியவர்கள் இவ்வாறு செய்தார்கள். ஆனால், அவர் “நான் ஏன் பார்க்கக் கூடாது? எனது சகோதரர் சிதைக்கப் பட்டுள்ளார் என்ற செய்தி எனக்கு தெரியும். இன்ஷா அல்லாஹ்! இதற்கான நன்மையை நான் அல்லாஹவிடம் எதிர்பார்த்திருக்கிறேன்” என்று கூறவே, அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. பிறகு ஸஃபிய்யா (ரழி) தனது சகோதரரை பார்த்து “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்” (நாங்கள் அல்லாஹ்விற்காக உள்ளவர்கள். அவனிடமே மீளுபவர்கள்) என்று கூறி, அவரின் நன்மைக்காகவும் பாவமன்னிப்புக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். இதற்குப் பின் ஹம்ஜா (ரழி) அவர்களை அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷு (ரழி) அவர்களுடன் நல்லடக்கம் செய்ய நபியவர்கள் ஏற்பாடு செய்தார்கள்.

இப்னு மஸ்வூத் (ரழி) கூறுகிறார்: “ஹம்ஜா (ரழி) அவர்களுக்காக நபி (ஸல்) அழுததைப் போன்று வேறு யாருக்கும் அவர்கள் அழுது நாங்கள் பார்க்கவில்லை. ஹம்ஜா (ரழி) அவர்களைக் கிப்லாவின் திசையில் வைத்து அவரது ஜனஸாவுக்கு முன் நபியவர்கள் நின்றார்கள். அப்போது தனது சிறிய தந்தைக்கு ஏற்பட்டதை எண்ணி நபியவர்கள் அதிகமாக அழுதார்கள்” (முக்தஸர் ஸீரத்துர்ரஸூல்)

போரில் உயிர்நீத்த தியாகிகளின் காட்சி முஸ்லிம்களது உள்ளங்களை கசக்கி பிழிந்தது; கண்களை குளமாக்கியது; தியாகிகளின் உடல்களை மறைப்பதற்குப் போதுமான துணிகள் கிடைக்கவில்லை. ஹம்ஜா (ரழி) அவர்களைப் போர்துவதற்கு கருப்பு, வெள்ளை நிறக் கோடுகள் உள்ள ஒரு போர்வையைத் தவிர வேறெதுவும் இருக்கவில்லை. அப்போர்வையில் அவரது தலையை மறைத்தால் பாதங்கள் தெரிந்தன; பாதங்களை மறைத்தால் தலை தெரிந்தது. பிறகு தலை மறைக்கப்பட்டு, கால்கள் “இத்கிர்” என்ற செடியால் மூடப்பட்டன. (முஸ்னது அஹ்மது, மிஷ்காத்)

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) கூறுகிறார்கள்: “முஸ்அப் (ரழி) கொல்லப்பட்டார். அவர் என்னை விட மிகக் சிறந்தவர். அவர் உடலை ஒரு சிறிய போர்வையால்தான் போர்த்தப்பட்டது. அவரது தலைப் பக்கம் துணியை இழுத்தால் கால்கள் தெரிந்தன. கால்களின் பக்கம் துணியை இழுத்தால் தலை தெரிந்தது. இந்நிலையைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் “அப்போர்வையால் அவரது தலையை மறைத்து, அவரது காலுக்கு “இத்கிர்” என்ற செடியைப் போர்த்தி விடுங்கள்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

நபியவர்களின் பிரார்த்தனை

உஹுத் மைதானத்திலிருந்து எதிரிகள் சென்றுவிட்ட போது எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் “நீங்கள் வரிசையாக நில்லுங்கள்; கண்ணியத்திற்கும் மகிமைக்கும் உரித்தான எனது இறைவனை நான் புகழ வேண்டும்” என்று கூறினார்கள். நாங்கள் நபியவர்களுக்குப் பின் பல அணிகளாக நின்று கொண்டோம்.

அதற்குப் பின் நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்:

“அல்லாஹ்வே! புகழெல்லாம் உனக்கே உரித்தானது. நீ விரித்ததை மடக்குபவர் யாரும் இல்லை. நீ மடக்கியதை விரிப்பவர் யாரும் இல்லை. நீ வழிகேட்டில் விட்டவருக்கு நேர்வழி காட்டுபவர் யாரும் இல்லை. நீ நேர்வழி காட்டியவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. நீ தடுத்ததைக் கொடுப்பவர் யாரும் இல்லை. நீ கொடுத்ததைக் தடுப்பவர் யாரும் இல்லை. நீ நெருக்கமாக்கி வைத்ததை தூரமாக்கி வைப்பவர் யாருமில்லை. அல்லாஹ்வே! உனது வளங்கள், உனது கருணை, உனது கிருபை, உனது இரணம் ஆகியவற்றை நீ எங்களுக்கு விசாலமாக வழங்குவாயாக!

அல்லாஹ்வே! நீங்காத, அகன்று போகாத, நிரந்தரமான அருட்கொடையை உன்னிடம் கேட்கிறேன். அல்லாஹவே! சிரமமான நேரத்தில் உதவியையும், பயத்தின் நேரத்தில் பாதுகாப்பையும் உன்னிடம் கேட்கிறேன். அல்லாஹ்வே! நீ எங்களுக்கு கொடுத்தவற்றின் தீங்கிலிருந்தும், நீ எங்களுக்கு கொடுக்காதவற்றின் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். அல்லாஹ்வே! எங்களுக்கு ஈமானை (இறைநம்பிக்கையை) பிரியமாக்கி வை. அதை எங்களது உள்ளங்களில் அலங்கரித்து வை. இறை நிராகரிப்பு, உனது கட்டளைக்கு மாறுசெய்வது, எனக்குக் கட்டுப்படாமல் விலகிப்போவது ஆகியவற்றை எங்களுக்கு வெறுப்பாக்கி விடு. எங்களைப் பகுத்தறிவாளர்களில் ஆக்கிவிடு. அல்லாஹ்வே! எங்களை முஸ்லிம்களாக மரணிக்க வை! முஸ்லிமகளாக எங்களை வாழச் செய்! நஷ்டமடையாதவர்களாக, சோதனைக்குள்ளாகாதவர்களாக எங்களை நல்லோர்களுடன் சேர்த்து வை! அல்லாஹ்வே! உனது தூதர்களைப் பொய்யாக்கி, உனது வழியிலிருந்து தடுக்கும் நிராகரிப்பாளர்களை நீ அழித்துவிடு! அவர்கள் மீது உனது தண்டனையையும் வேதனையையும் இறக்குவாயாக! அல்லாஹ்வே! வேதம் கொடுக்கப்பட்டவர்களில் இருக்கும் நிராகரிப்பாளர்களை நீ அழித்துவிடு! உண்மையான இறைவனே!” (அல்அதபுல் முஃப்ரத், முஸ்னத் அஹ்மது)