பக்கம் -60-

மதீனா திரும்புதல் அன்பு மற்றும் தியாகத்தின் அற்புதங்கள்

தியாகிகளை அடக்கம் செய்து, அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனிடம் பிரார்த்தனை புரிந்த பின், நபி (ஸல்) அவர்கள் மதீனா திரும்பினார்கள். போர் நடந்து கொண்டிருந்த போது இறைநம்பிக்கை கொண்ட ஆண்கள் புறத்தில் நிகழ்ந்ததைப் போன்று, திரும்பும் வழியில் இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் புறத்திலும் பல அற்புத நிகழ்ச்சிகள் நடந்தன.

ஹம்னா பின்த் ஜஹ்ஷ் எனும் பெண்மணி நபி(ஸல்) அவாக்ளை வழியில் சந்தித்தார். அவரிடம் அவருடைய சகோதரர் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் மரணமான செய்தி கூறப்பட்டது. அவர் “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்” என்று கூறி, அவருக்காக பாவ மன்னிப்புத் தேடினார். பின்பு அன்னாரின் தாய்மாமன் ஹம்ஜா (ரழி) இறந்த செய்தியும் கூறப்பட்டது. அதற்கும் அவர் “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்” என்று கூறி பாவ மன்னிப்புத் தேடினார். பின்பு அவரது கணவர் முஸ்அப் இப்னு உமைர் (ரழி) இறந்த செய்தி கூறப்படவே, அவர் தேம்பி அழலானார். அப்போது நபி (ஸல்) அவர்கள் “ஒரு பெண்ணின் கணவன் அவளிடம் நீங்காத இடத்தைப் பெற்றிருக்கிறான்” என்று கூறினார்கள். (இப்னு ஹிஷாம்)

தீனார் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை முஸ்லிம்கள் வழியில் சந்தித்தார்கள். அந்தப் பெண்ணின் கணவரும், சகோதரரும், தந்தையும் போரில் கொல்லப்பட்டிருந்தார்கள். இவர்களின் மரணச் செய்தியை முஸ்லிம்கள் அவருக்குக் கூறினார்கள். ஆனால், அப்பெண்மணி “அல்லாஹ்வின் தூதர் எப்படி இருக்கிறார்கள்?” என்று கேட்டார். முஸ்லிம்கள் “இன்னாரின் தாயே! நீர் விரும்பியதைப் போன்று நபியவர்கள் நல்ல முறையில் இருக்கிறார்கள். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!” என்று கூறினார்கள். அதற்கு அந்தப் பெண் “எனக்கு அவர்களைக் காட்டுங்கள். நான் அவர்களைப் பார்க்கவேண்டும்” என்றார். நபியவர்களைக் கண்குளிர பார்த்தப் பிறகு “உங்களைப் பார்த்தப் பின்னால் எல்லா துன்பங்களும் எங்களுக்கு இலகுவானதே!” என்று அப்பெண்மணி கூறினார்.

வழியில் நடந்த மற்றொரு நிகழ்ச்சி: நபி (ஸல்) அவர்களை ஸஅது இப்னு முஆதின் தாயார் சந்தித்தார்கள். ஷஅது நபியவர்களுடைய குதிரையின் கடிவாளத்தைப் பிடித்தவாராக நடந்து வந்து கொண்டிருந்தார். “அல்லாஹ்வின் தூதரே! இதோ... எனது தாய் வருகிறார்” என்றார். நபியவர்கள் “நல்லபடியாக வரட்டும்” கூறி அவருக்காக நின்றார்கள. அவர் அருகே வந்தவுடன் அவரது மகன் அம்ர் இப்னு முஆத் (ரழி) இறந்ததற்கு ஆறுதல் கூறினார்கள். அதற்கு அப்பெண்மணி “நபியே! உங்களை நல்ல நிலையில் பார்த்தவுடன் மற்ற அனைத்து சோதனைகளையும் நான் சிறியதாகவே கருதுகிறேன்” என்று கூறினார். பின்பு நபியவர்கள் உஹுத் போரில் கொல்லப்பட்டவர்களுக்காக பிரார்த்னை செய்துவிட்டு “ஸஅதின் தாயே! நீர் நற்செய்தி பெற்றுக்கொள்! உஹுதில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தார்களுக்கு நற்செய்தி சொல்! அவர்கள் அனைவரும் சொர்க்கத்தில் தோழர்களாக உலவுகின்றனர். அவர்கள் குடும்பத்தார்களுக்காகவும் அவர்களின் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படும்” என்றார்கள். இதை கேட்ட ஸஅதின் தாயார் “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் பொருந்திக்கொண்டோம். மகிழ்ச்சி அடைந்தோம். இதற்க்குப் பின் யார் அவர்களுக்காக அழுவார்கள்! என்று கூறி, மேலும் “அல்லாஹ்வின் தூதரே! எஞ்சியிருக்கும் அவர்களது உறவினர்களுக்காக நீங்கள் பிரார்த்னை புரியுங்கள்” என்றார். நபியவர்கள் “அல்லாஹ்வே! இவர்களின் மனக் கவலையைப் போக்குவாயாக! இவர்களது சோதனைகளை நிவர்த்தி செய்வாயாக! எஞ்சி உள்ளவர்களுக்கு அழகிய பகரத்தைத் தருவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். (அஸ்ஸீரத்துல் ஹல்பிய்யா)

ஹிஜ்ரி 3 ஷவ்வால் மாதம், பிறை 7 சனிக்கிழமை மாலை நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்தடைந்தார்கள்.

பிறகு குடும்பத்தாரைச் சந்தித்து தனது வாளை மகள் பாத்திமாவிடம் கொடுத்து “இதிலிருந்து இரத்தத்தைக் கழுவி வை! அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது எனக்கு இன்று உண்மையாக உழைத்தது” என்றார்கள். பின்பு அலியும் தனது வாளை பாத்திமாவிடம் கொடுத்து “இதனை கழுவி இதிலிருந்து இரத்தத்தை அகற்றிவிடு. அல்லாஹ்வின் மீது ஆனையாக! இன்றைய தினம் இது எனக்கு உண்மையாக தொண்டாற்றி விட்டது” என்றார்கள். “நீ போரில் உண்மையாக தொண்டாற்றியதைப் போலவே உன்னுடன் ஸஹ்ல் இப்னு ஹுனைஃப் மற்றும் அபூ துஜானாவும் உண்மையாக தொண்டாற்றினார்கள்” என்றார்கள். (இப்னு ஹிஷாம்)

முஸ்லிம்களில் எழுபது நபர்கள் கொல்லப்பட்டார்கள் என்று பெரும்பாலான அறிவிப்புகள் கூறுகின்றன. அதன் விவரமாவது:

முஹாஜிர்களில் 4 நபர்கள்; யூதர்களில் 1 நபர்; கஸ்ரஜ் இனத்தவர்களில் 41 நபர்கள்; அவ்ஸ் இனத்தவர்களில் 24 நபர்கள். (மொத்தம் 70 நபர்கள்)

இணைவைப்பவர்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை இப்னு இஸ்ஹாக் (ரஹ்) இருபத்து இரண்டு என்று கூறுகிறார். ஆனால், போர் சம்பந்தபட்ட அறிவிப்புகள் அனைத்தையும் நன்கு ஆராய்ந்து பார்க்கும்போது முப்பத்து ஏழு பேர்கள் கொல்லப்பட்டார்கள் என்று தெரிகிறது, உண்மையை அல்லாஹ்வே அறிவான் (இப்னு ஹிஷாம், ஃபத்ஹுல் பாரி)

மதீனாவில் அவசர நிலை

ஹிஜ்ரி 3 ஷவ்வால் 8, ஞாயிறு இரவு உஹுதிலிருந்து திரும்பிய பின் களைப்பும் அசதியும் எவ்வளவுதான் அதிகமாக இருந்தும் முஸ்லிம்கள் பாதூகாப்புடனே அன்றிரவை கழித்தனர். அதாவது, மதீனாவின் தெருக்களிலும், அதன் வாயில்களிலும் வீரர்கள் பாதுகாப்புக்காக நின்றிருந்தனர். நபி(ஸல்) அவர்களின் பாதுகாப்பிலும் ஒரு பிரிவினர் ஈடுபட்டிருந்தனர். எத்திசையிலிருந்தும் எதிரிகள் மூலம் ஆபத்து நிகழலாம் என்று அவர்கள் சந்தேகப்பட்டதால் இவ்வாறு விழிப்புணர்வுடன் இருந்தனர்.

“ஹம்ராவுல்” அஸத் போர்

நபி(ஸல்) அவர்கள் நிலைமையை யோசித்தவாறே அன்றிரவைக் கழித்தார்கள். போரில் தங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை என குறைஷிகள் சிந்திக்கத் தொடங்கினால், அதற்காக கைசேதம் அடைந்து மதீனாவின் மீது இரண்டாவது முறை போர் தொடுக்க திரும்பி வரலாம் என்று நபியவர்கள் யோசித்தார்கள். எனவே, எதிரிகளைப் பின்தொடர்ந்து சென்று மதீனாவின் எல்லைகளை விட்டே விரட்டியடிக்க வேண்டுமென்று முடிவு செய்தார்கள்.

இது குறித்து வரலாற்று ஆசிரியர்கள் கூறுவதின் சுருக்கமாவது:

உஹுத் போர் முடிந்து அடுத்த நாள் காலை, அதாவது ஹிஜ்ரி 3, ஷவ்வால் 8 ஞாயிற்றுக் கிழமை காலை, நபி(ஸல்) அவர்கள் எதிரிகளைச் சந்திப்பதற்கு முஸ்லிம்கள் ஆயத்தமாக இருக்க வேண்டுமெனக் கூறினார்கள். மேலும், உஹுத் போரில் கலந்தவர்கள்தான் தங்களுடன் வர வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்தார்கள். அப்துல்லாஹ் இப்னு உபை நானும் வருகிறேன் என்றான். நபியவர்கள் வேண்டாம் என்று மறுத்து விட்டார்கள். முஸ்லிம்கள் அனைவரும் தங்களுக்கு ஏற்பட்டிருந்த காயம், களைப்பு எதையும் பொருட்படுத்தாமல் நபியவர்களின் அழைப்புக்கு “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டோம். உங்களது கட்டளையை ஏற்றுக் கொண்டோம்” என்று பதிலளித்தார்கள்.

அப்போது ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) எனும் தோழர் “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் கலந்து கொள்ளும் அனைத்து போரிலும் நானும் கலந்து கொள்ள வேண்டும் என்று நிச்சயமாக விரும்புகிறேன். ஆனால், எனது தந்தை உஹுத் போருக்கு செல்லும் போது எனது சகோதரிகளின் பாதுகாப்புக்காக என்னை விட்டுச் சென்றார்கள். அதனால்தான் நான் தங்கினேன். எனவே, எனக்கு இப்போது உங்களுடன் போரில் கலந்து கொள்ள அனுமதி அளியுங்கள்” என்று கூறவே நபியவர்கள் அனுமதி வழங்கினார்கள்.

நபி(ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் மதீனாவிலிருந்து 8 மைல்கள் தூரமுள்ள “ஹம்ராவுல் அஸத்” என்ற இடத்திற்கு வந்து முகாமிட்டார்கள். அங்கு குஜாஆ வமிசத்தைச் சேர்ந்த “மஅபத் இப்னு அபூமஅபத்” என்பவர் நபியவர்களிடம் வந்து இஸ்லாமைத் தழுவினார். (சிலர் அவர் இணைவைப்பவராகத்தான் இருந்தார். இருப்பினும் குஜாஆ மற்றும் ஹாஷிம் ஆகிய இரு கிளையினருக்கும் இருந்த நட்பின் காரணமாக நபியவர்களிடம் வந்தார் என்று கூறுகின்றனர். ஆக) அவர் நபியவர்களிடம் “அல்லாஹ்வின் மீது ஆனையாக! உமது தோழர்களுக்கு ஏற்பட்ட நிலை எங்களுக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. அல்லாஹ் உங்களுக்க சுகம் அளிக்க வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். நான் ஏதாவது உங்களுக்கு செய்ய வேண்டுமா? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் “நீ அபூ ஸுஃப்யானிடம் சென்று அவரை எங்களை விட்டும் திருப்பிவிடு” என்றார்கள்.

எதிரிகள் மதீனாவிற்குக் திரும்ப வரவேண்டுமென யோசிப்பார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் பயந்தது உண்மையாகவே நடந்தது. எதிரிகள் மதீனாவிற்கு 36 மைல்கள் தொலைவிலுள்ள “ரவ்ஹா” என்ற இடத்தை அடைந்த போது தங்களுக்குள் ஒருவர் மற்றவரை பழித்துக் கொண்டனர். சிலர் சிலரைப் பார்த்து “நீங்கள் என்ன செய்தீர்கள்; ஒன்றுமே செய்யவில்லை; அவர்களில் சில வீரர்களைத்தான் கொன்றுள்ளீர்கள்; அவர்களின் தலைவர்கள் மீதமிருக்கிறார்கள்; அவர்கள் உங்களுடன் போர் செய்ய மக்களை அழைத்து வரலாம்; திரும்புங்கள்; நாம் அவர்களிடம் சென்று அவர்களது ஆற்றல் அனைத்தையும் அடியோடு அழித்து வருவோம்” என்றனர்.

இணைவைப்பவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய இரு தரப்பாரின் வலிமையையும் ஆற்றலையும் சரியாக ஒப்பிட்டு பார்க்காதவர்கள்தான் அவ்வாறு ஆலோசனை சொல்லி இருப்பார்கள். ஆகவேதான், உண்மை நிலையை புரிந்த அவர்களின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவனான ஸஃப்வான் இப்னு உமைய்யா இந்த கருத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த “எனது கூட்டத்தினரே! அவ்வாறு நீங்கள் செய்யாதீர்கள். உஹுத் போரில் கலந்து கொள்ளாமல் தங்கிவிட்ட முஸ்லிம்களெல்லாம் ஒன்று சேர்ந்து உங்களைத் தாக்கக்கூடும் என நான் பயப்படுகிறேன்; நீங்கள் திரும்பிச் சென்று விடுங்கள். வெற்றி உங்களுக்குத்தான் கிடைத்துள்ளது. நீங்கள் மீண்டும் மதீனா சென்றால் அவர்கள் வெற்றி பெற்று நீங்கள் தோற்றுவிடுவீர்களோ என் நான் அஞ்சுகிறேன்” என்றான். இவனது ஆலோசனையை பெரும்பாலானோர் ஏற்றுக் கொள்ளவில்லை.

மதீனாவிற்கு மீண்டும் செல்ல வேண்டும் என முடிவெடுத்து அபூ ஸுஃப்யான் தனது படையோடு கிளம்புவதற்கு ஆயத்தமாகும் போது அபூ ஸுஃப்யானிடம் மஅபத் இப்னு மஅபத் வந்தார். அபூ ஸுஃப்யானுக்கு அவர் முஸ்லிமானது தெரியாது. அவர் “மஅபதே! ஏதாவது செய்தி இருக்கிறதா?” என்றார். அதற்கு மஅபத் ஒரு பெரிய கற்பனையான போரை அபூ ஸுஃப்யானின் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார். அதாவது “அபூ ஸுஃப்யானே! முஹம்மது தனது தோழர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு மதீனாவை விட்டு புறப்பட்டு விட்டார். நான் இதுவரை பார்திராத ஒரு ராணுவத்துடன் அவர் உன்னைத் தேடி வருகிறார். அவர்கள் உன் மீது நெருப்பாய் பற்றி எரிகிறார்கள். அன்றைய உஹுத் போரில் கலந்து கொள்ளாதவர்கௌல்லாம் அவருடன் சேர்ந்து இப்போது புறப்பட்டுள்ளனர். தாங்கள் நழுவவிட்ட ஒரு சந்தர்ப்பத்தை எண்ணி மிகுந்த வருத்தத்துடன் வருகின்றனர். உங்களுக்கு எதிராக அவர்களிடம் இருக்கும் கோபத்தைப் போன்று நான் பார்த்ததே இல்லை” என்று கூறினார்.

இதைக் கேட்ட அபூ ஸுஃப்யான் “உனக்கு நாசம் உண்டாகட்டும். நீ என்ன சொல்கிறாய்?” என்று அதிர்ந்தார். அதற்க்கு அவர் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ இங்கிருந்து அவர்களை நோக்கி பயணித்தால் வெகு விரைவில் அவர்களுடைய குதிரைகளைக் காண்பாய்” என்றார். (அல்லது இந்தக் காட்டுக்குப் பின்புறத்திலிருந்து முஸ்லிம்களுடைய படையின் முதல் படை வருவதை நீ பார்க்கப் போகிறாய் என்றார்). அதற்கு அபூ ஸுஃப்யான் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்களை வேரோடு அழிக்க வேண்டுமென்று நாங்கள் எங்களின் முழு ஆற்றலையும் ஒன்று சேர்த்திருக்கிறோம்” என்றார். அதற்க “அவ்வாறு நீ செய்யாதே! நான் உனக்கு உனது நன்மையை நாடி இதைக் கூறுகிறேன். நீ திரும்புவதுதான் உனக்கு நல்லது” என்றார் மஅபத்.

மஅபத் தந்த தகவலால் எதிரிகளின் நம்பிக்கையும் வீரமும் தளர்ந்து, பயமும் திடுக்கமும் அவர்களை ஆட்கொண்டது. மக்காவிற்குத் திரும்புவதுதான் தங்களுக்கு ஏற்றமானது என்று கருதினர். இருப்பினும் முஸ்லிம் படைகள் தங்களை விரட்டி வருவதை நிருத்திக் கொள்ள வேண்டுமென்பதற்காக இஸ்லாமிய படைக்கு எதிராக ஒரு பொய் பிரச்சாரப் போரை அபூ ஸுஃப்யான் தூண்டிவிட்டார். அதாவது, மதீனா சென்று கொண்டிருந்த அப்துல் கைஸ் கிளையினர் இவர்களை வழியில் பார்த்த போது அவர்களிடம் “நான் கூறும் செய்தியை என் சார்பாக முஹம்மதுக்கு எட்ட வைப்பீர்களானால் நீங்கள் மக்கா வரும் போது “உக்காள்” கடைத் தெருவில் உங்களின் ஒட்டகம் சுமை தாங்கமளவிற்கு நான் காய்ந்த திராட்சையை தருவேன்” என்று அபூ ஸுஃப்யான் கூற அவர்கள் “சரி” என்றனர். “முஹம்மதையும் அவரது தோழர்களையும் வேரோடு அழிக்க நாங்கள் முழு ஆற்றலையும் ஒன்று திரட்டி வருகிறோம் என்ற செய்தியை முஹம்மதுக்கு சொல்லிவிடுங்கள்” என்று அபூ ஸுஃப்யான் கூறினார்.

அந்த வியாபாரக் கூட்டம் நபி(ஸல்) அவர்களிடமும் நபித்தோழர்களிடமும் வந்து அபூ ஸுஃப்யான் தாங்களிடம் கூறி அனுப்பிய செய்தியைக் கூறினர். அப்போது நபியவர்களும் நபித்தோழர்களும் ஹம்ராவுல் அஸத் என்ற இடத்தில் தங்கியிருந்தனர். இதைப் பற்றித்தான் அல்லாஹ் பின்வரும் வசனத்தில் கூறுகிறான்.

மக்களில் சிலர் அவர்களிடம்; “திடமாக மக்களில் (பலர் உங்களுடன் போரிடுவதற்காகத்) திரண்டு விட்டார்கள், எனவே அப்படையைப்பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்” என்று கூறி (அச்சுறுத்தி)னர்; ஆனால் (இது) அவர்களின் ஈமானைப் பெருக்கி வலுப்படச் செய்தது: “அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்” என்று அவர்கள் கூறினார்கள். இதனால் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து நிஃமத்தையும் (அருட்கொடையையும்,) மேன்மையையும் பெற்றுத் திரும்பினார்கள்; எத்தகைய தீங்கும் அவர்களைத் தீண்டவில்லை; (ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றினார்கள் - அல்லாஹ் மகத்தான கொடையுடையவனாக இருக்கிறான். அல்குர்அன் 3:173-174

ஆனால், இவர்களுடைய பேச்சை நபியவர்களும் முஸ்லிம்களும் பொருட்படுத்தவில்லை. எதிரிகளை எதிர்பார்த்து (ஹிஜ்ரி 3) ஷவ்வால் பிறை 9, 10, 11 திங்கள், செவ்வாய், புதன் ஆகிய மூன்று நாட்கள் நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்களுடன் ஹம்ராவுல் அஸதில் தங்கியிருந்தார்கள். ஞாயிற்றுக்கிழமை பிறை 8ல் ஹம்ராவுல் அஸதிற்கு வந்து சேர்ந்தார்கள் என்பதை நாம் முன்பே கூறியிருக்கின்றோம். அப்போது அபூ இஜ்ஜா அல் ஜுமஹி என்பவனை நபியவர்கள் கைது செய்தார்கள். ஏற்கனவே பத்ர் போரில் கைது செய்யப்பட்டிருந்த இவனை நபியவர்கள் அவன் ஏழை, அவனுக்க பெண் பிள்ளைகள் அதிகம் இருக்கின்றனர் என்ற காரணத்தால் அவன் மீது கருணை காட்டி அவனை உரிமையிட்டு தனக்கு எதிராக செயல்படக்கூடாது என்று அவனிடம் ஒப்பந்தம் வாங்கினார்கள். ஆனால், அவன் அந்த ஒப்பந்தத்தை மீறி உஹுத் போரிலும் கலந்து கொண்டதால் நபியவர்கள் அவனை கைது செய்தார்கள். அவன் நபியவர்களிடம் “முஹம்மதே! என்னை மன்னித்துவிடும். என்மீது உபகாரம் செய். எனது பெண் பிள்ளைகளுக்காக என்னை நீ விட்டுவிடு. நான் இப்போது செய்ததைப் போன்று இனி எப்போதும் செய்ய மாட்டேன் என்று உங்களுக்க வாக்குறுதி தருகிறேன்” என்றான். ஆனால், நபியவர்கள் “இதற்குப் பின் நீ மக்காவிற்கு சென்று முஹம்மதை இருமுறை நான் ஏமாற்றிவிட்டேன் என்று கூறும் நிலைமை (எனக்கு) ஏற்படக்கூடாது. ஏனெனில் இறைநம்பிக்கையாளன் ஒரு புற்றில் இருமுறை தீண்டப்பட மாட்டான். (அதாவது ஒரு தவறை மறுமுறை செய்யமாட்டார்) என்று கூறிவிட்டு ஜுபைர் அல்லது ஆஸிம் இப்னு ஸாபித்திடம் அவனது தலையை துண்டிக்கக் கூறினார்கள்.

இவ்வாறே எதிரிகளின் ஒற்றர்களில் ஒருவனான முஆவியா இப்னு முகீரா இப்னு அபுல் ஆஸையும் கொன்றுவிட நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (இவன் பிற்காலத்தில் வந்த முஸ்லிம் மன்னர் அப்துல் மலிக் இப்னு மர்வானின் தாய்வழி பாட்டனாவான்.)

இதன் விவரமாவது: இணைவைப்பவர்கள் உஹுத் போர் முடிந்து மக்காவிற்கு திரும்புகையில் இவன் தனது ஒன்றுவிட்ட சகோதரர் உஸ்மான் இப்னு அஃப்பான் (ரழி) அவர்களைப் பார்க்க மதீனாவிற்கு வந்தான். உஸ்மான் (ரழி) நபியவர்களிடம் இவனுக்கு பாதுகாப்புக் கொடுக்கும்படி கேட்டார்கள். நபியவர்கள் அவனுக்கு பாதுகாப்புக் கொடுத்துவிட்டு மூன்று நாட்கள் மட்டும் தங்கவேண்டும், அதற்கு மேல் இங்கு தங்கியிருந்தால் கொன்றுவிடுவோம் என்று எச்சரிக்கை விடுத்தார்கள். இஸ்லாமியப் படை மீண்டும் (அல்லது இரண்டாம் முறை) மதினாவில் இருந்து வெளியேறியதற்குப் பின் இவன் மூன்று நாட்களுக்கு மேலாகவும் மதீனாவில் தங்கியிருந்து குறைஷிகளுக்காக உளவு வேலை பார்த்துக் கொண்டிருந்தான். இஸ்லாமியப் படை மதீனாவிற்குத் திரும்ப வருகிறது என்று தெரிந்தவுடன் அவன் மதீனாவிலிருந்து தப்பித்து ஓடினான். அவனைக் கொலை செய்து வரும்படி நபி(ஸல்) ஜைது இப்னு ஹாரிஸா, அம்மார் இப்னு யாசிர் (ரழி) ஆகிய இருவரையும் அனுப்பினார்கள். அவ்விருவரும் அவனைக் கொன்று வந்தார்கள். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

ஹம்ராவுல் அஸத் என்ற இந்த போர் ஒரு தனி போரல்ல. மாறாக, உஹுத் போரின் ஒரு தொடர்ந்தான். உஹுத் போரின் ஒரு முடிவுரை என்றும் இதை நாம் சொல்லலாம்.

இதுவரை உஹுத்ப் போரின் அனைத்து விவரங்களையும் நிலைமைகளையம் நிகழ்வுகளையும் தேவையான அளவு அலசினோம். இந்த போரின் முடிவு முஸ்லிம்களுக்கு வெற்றியா தோல்வியா என்பதைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் பலர் மிக நீண்ட ஆராய்ச்சி செய்திருக்கின்றார்கள். போரின் இரண்டாவது கட்டத்தில் எதிரிகளின் தாக்குதலே ஓங்கியிருந்தது. முஸ்லிம்களுக்கு உயிர் சேதம் அதிகம். முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் முற்றிலும் தோற்றுவிட்டனர். போரின் அனைத்து நிலைகளும் மக்காவினருக்கே சாதகமாக அமைந்தன. இருப்பினும் இதை எல்லாம் வைத்து போரில் வெற்றி அவர்களுக்கு கிடைத்து விட்டது என்று நாம் கூறமுடியாது.

அதற்கான காரணங்கள்: எதிரிகள் முஸ்லிம்களின் ராணுவ முகாம்களை இறுதிவரை கைப்பற்ற முடியவில்லை. முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் போரிலிருந்து பின்வாங்கவில்லை. கடினாமான சோதனையும் எதிரிகளின் ஆதிக்கமும் ஏற்பட்டிருந்தும் கூட புறமுதுகுக் காட்டாமல் தங்களது தலைமையின் கீழ் ஒன்று சேர்ந்து வீரத்துடன் எதிர்த்தனர். முஸ்லிம்களை எதிரிகள் விரட்டியடிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாவில்லை. முஸ்லிம்களிலிருந்து எவரும் எதிரிகளிடம் கைதியாகவில்லை. எதிரிகள் முஸ்லிம்களின் உடைமைகளில் எவற்றையும் கைப்பற்ற இயலவில்லை. போர்க் களத்திலிருந்து எதிரிகளே முதலில் வெளியேறினர். முஸ்லிம்கள் அங்கேயே இருந்தனர். போரில் வெற்றி பெற்றவர்கள் ஒன்றிரண்டு நாட்கள் அந்த மைதானத்திலேயே அக்கால வழக்கப்படி தங்கியிருப்பது போன்று எதிரிகள் மைதானத்தில் தங்கியிருக்கவில்லை. மதீனாவில் நுழைந்து அங்குள்ள செல்வங்களையும் பிள்ளை குட்டிகளையும் சூறையாட அவர்களுக்குத் துணிவு பிறக்கவில்லை. போர்களத்திலிருந்து மதீனா மிக அருகாமையில் எவ்வித பாதுகாப்புமில்லாமல் காலியாக இருந்தும் கூட அவர்களுக்கு அங்கு செல்ல துணிவு பிறக்கவில்லை.

இதன் மூலம் நமக்கு உறுதியாக தெரிய வருவது என்னவெனில், முஸ்லிம்களுக்குப் பெரிய நஷ்டம் ஏற்படுத்தும் அளவுக்குண்டான ஒரு சந்தர்ப்பம்தான் அவர்களுக்குக் கிடைத்தது. எனினும், முஸ்லிம்களைச் சுற்றி வளைத்து, முற்றிலும் அழித்து, ஒழிக்க வேண்டும் என்ற தங்களது நேர்க்கத்தில் தோல்வியைத்தான் கண்டார்கள். முஸ்லிம்களுக்க ஏற்பட்ட இதுபோன்ற நஷ்டங்கள் பெரும்பாலான சமயங்களில் போரில் வெற்றி பெறும் படையினருக்கும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இந்த நஷ்டத்தைக் கவனித்து எதிரிகளுக்கு இப்போரில் வெற்றி கிடைத்தது என்று சொல்ல முடியாது.

மேலும், அபூ ஸுஃப்யான் போர்க்களத்தை விட்டு விரைவாக திரும்பி செல்வதிலேயே குறியாக இருப்பது, போர் தொடர்ந்தால் தங்களுக்கு தோல்வியும் இழிவும் ஏற்படும் என்று அவர் பயந்து விட்டார் என்பதையே நமக்க உறுதி செய்கிறது. அடுத்ததாக ஹம்ராவுல் அஸத் போர் விஷயத்தில் அபூ ஸுஃப்யானின் நிலைமையைப் பாhக்கும் போது இது மேலும் உறுதியாகிறது.

ஆகவே, இந்த போரைப் பொறுத்த வரை இருசாராரில் ஒவ்வொருவருக்கும் ஒரளவு வெற்றியும் தோல்வியும் ஏற்பட்டது; இவ்வாறே இரு படையினரும் மைதானத்திலிருந்து புறமுது காட்டி ஓடவில்லை; தங்களது முகாம்களை எதிரிகள் ஆக்கிரமித்துக் கொள்வதற்குச் சந்தர்ப்பம் அளிக்காமல் போரிலிருந்து தாங்களாகவே ஒதுங்கிக் கொண்டனர்.

இதைத்தான் அல்லாஹ் பின்வருமாறு சுட்டிக் காட்டுகிறான்.

மேலும், (பகைக்) கூட்டத்தைத் தேடிச் செல்வதில் ஊக்கம் குன்றாதீர்கள்; நீங்கள் (போரில்) துன்பப்படுவீர்களானால், நிச்சயமாக அவர்களும் உங்களைப் போன்றே துன்பப்படுகிறார்கள் - அல்லாஹ்விடமிருந்து அவர்கள் எதிர்பார்க்காத (நற்கூலியும் வெற்றியும்) நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். அல்லாஹ் மிக அறிந்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். அல்குர்ஆன் 4:104

இந்த வசனத்தில் இரு படையினரில் ஒவ்வொருவரையும் மற்றவருக்கு ஒப்பாகவே கூறுகிறான். அதாவது, அவர்களால் உங்களுக்கு எப்படி வேதனை ஏற்பட்டதோ அவ்வாறே உங்களால் அவர்களுக்கும் வேதனை ஏற்பட்டது. இதிலிருந்து இருவரின் நிலைமைகளும் ஒன்றுக்கொன்று ஒப்பாகவே இருந்தன. வெற்றியின்றியே இரு சாராரும் மைதானத்திலிருந்து திரும்பினர் என்று நாம் விளங்கிக் கொள்ளலாம்.